அதிரடி.. சர்வதேச பயங்கரவாதியாக அப்துல் ரஹ்மான் மக்கி.. ஐநா அறிவிப்பு.. இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?
வாஷிங்டன்: லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்தின் உறவினரான அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச தீவிரவாதி என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. இந்தியாவில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த இவர் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தார். இவரை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் இணைக்க சீனா போட்ட முட்டுக்கட்டை விலகிய நிலையில் அவர் சர்வேதச தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இது ஏன் இந்தியாவுக்கு முக்கியம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் பயங்கரவாதிகள் குழுவாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத கும்பல்கள் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
இந்நிலையில் தான் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது. இந்தியா, அமெரிக்காவில் சதிச்செயல்களை செயல்படுத்தியதோடு, தொடர்ந்து அதற்கான திட்டத்தை வகுத்து வந்த அப்துல் ரஹ்மான் மக்கி இருநாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாகஇருந்தது.

சீனா எதிர்ப்பு
இதனால் தான் அவரை சர்வதேச பயங்கரவாதியாக அடையாளப்படுத்த இந்தியா, அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தன. கடந்த ஜூன் மாதம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. இதனை சீனா எதிர்த்த நிலையில் அது கைக்கூடவில்லை.

சர்வதேச பயங்கரவாதியாக..
இந்நிலையில் தான் தற்போது அப்துல் ரஹ்மான் மக்கியை ஐநா பாதுகாப்பு சபை சர்வேதச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛ 2023 ஜனவரி 16ல் ஐநா பாதுகாப்பு கவுன்சில் குழு கூடி தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி அப்துல் ரஹ்மான் மக்கியின் பெயர் சர்வதேச பயங்கரவாதி என்ற பட்டியலில் கொண்டு வரப்பட்டுள்ளது.

திடுக் தகவல்கள்
இந்த அப்துல் ரஹ்மான் மக்கி லஷ்கர் இ-தொய்பா மற்றும் ஜமாத் உல் தாவா அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். தீவிரவாதத்துக்கு நிதி திரட்டுதல், இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்பில் இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்களுக்கு திட்டமிடும் பணியை அவர் செய்வதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்தியாவில் லஷ்கர் இ-தொய்பா அமைப்புகள் பல தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளன. இதற்கு மூளையாக அப்துல் ரஹ்மான மக்கி இருந்திருக்க வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது.

மும்பை தாக்குதல்
இந்தியாவை பொறுத்தமட்டில் 2000 டிசம்பர் 22ல் 6 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் டெல்லி செங்கோட்டையில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன்பிறகு 2008 ஜனவரி 1ல் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது 5 பேர் தாக்குதல் நடத்தினர், இதில் 7 வீரர்கள் மற்றும் ஒரு ரிக்சா ஓட்டுபவர் இறந்தனர். அதன்பிறகு 2008 நவம்பர் மாதம் 10 பயங்கரவாதிகள் சேர்ந்து மும்பையில் 26/11 தாக்குதல் நடத்தினர். பெரிய சேதத்தை விளைவித்த இந்த தாக்குதலில்அமீர் அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்ட நிலையில் மற்றவர்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்
இதுதவிர 2018 பிப்ரவரி ஸ்ரீநகரில் உள்ள கரண் நகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் இறந்தார். அதன்பிறகு 2018 மே மாதம் 30ம் தேதி பாரமுல்லாவில் நடந்த தாக்குதலில் 3 பொதுமக்கள் சுட்டு கொல்லப்பட்டனர். 2018 ஜூன் 14ல் மூத்த பத்திரிகையாளரும், ரைசிங் காஷ்மீரின் தலைமை ஆசிரியருமான ஷுஜாத் புகாரி மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதுதவிர 2018 ஆகஸ்ட் 7 ல் பந்திபோரா மாவட்டம் குரேஸ் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக அதிக ஆயுதம் ஏந்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் ஊடுருவ முயன்ற நிலையில் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மேஜர் உட்பட நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஏன் முக்கியம்?
இந்நிலையில் தான் அவர் சர்வேதச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தொடர்ந்து இந்தியா குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது. மேலும் அவரை பிடிக்க உலக நாடுகளின் பங்களிப்பு என்பது நிச்சயம் கிடைக்கும். இது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications