உள்ளூரில் உதவியவர்களை கைவிடுகிறதா அமெரிக்கா? ஆப்கனுடன் தூதரக உறவுகள் இல்லை என அறிவிப்பு
வாஷிங்டன்: ஆகஸ்ட் 31க்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது தூதரக உறவுகளை தொடராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகள் மற்றும் ராஜதந்திரிகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து அமெரிக்கா நழுவி விட்டது என்ற விமர்சனங்களுக்கு இந்த முடிவு காரணமாகியுள்ளது.
Recommended Video
அமெரிக்காவின் மிக நீண்ட போர் ஆப்கனில் நடந்ததுதான். 20 வருடங்களாக ஆப்கனை கட்டுக்குள் வைத்திருந்தது அமெரிக்கா. அங்கு ஜனநாயக அரசை நிலைநாட்டியது.
ஆனால் ஜோ பிடன் நிர்வாகம் ஆப்கனிலிருந்து அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற முடிவு செய்தாலும் செய்தது ஆப்கனில் தாலிபான்கள் எழுச்சியடைந்து மொத்த நாட்டையும் கைப்பற்றி விட்டனர்.

தூதரக உறவு இல்லை
தூதரக உறவுகளை அமெரிக்கா தொடரும், இதனால் இந்த போரில் அமெரிக்காவுக்கு உதவிய உள்ளூர் மக்கள், உளவாளிகள் போன்றவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்று சர்வதேச சமூகம் நினைத்திருந்த நிலையில், "அது நடக்க வாய்ப்பில்லை," என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் என்பிசி ஊடகத்தின் "மீட் தி பிரஸ்" நிகழ்ச்சியின்போது திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அமெரிக்கா உதவும்
அதேநேரம், "ஆப்கனை விட்டு வெளியேற கோரிக்கை விடுக்கும் மக்களுக்கு உதவ அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. அந்த முயற்சியில் காலக்கெடு இல்லை," என்று அவர் கூறினார். "ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேற விரும்பினால் அவர்கள் வெளியேறுவதற்கு உதவும் வழிமுறைகள் எங்களிடம் உள்ளன." என்று தனது பேட்டியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தூதரக அதிகாரிகள் நிலை
ஆப்கானிஸ்தானில் போர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், அனைத்து அமெரிக்க தூதரக ஊழியர்களும் காபூலை விட்டு வெளியேறிவிட்டனர். சுமார் 6க்கும் குறைவான தூதரக அதிகாரிகள் மட்டும் இப்போது தற்காலிக அடிப்படையில் இருக்கிறார்கள். இனி மக்களை வெளியேற்றுவதில், அவர்களின் பங்கு குறைவாகவே இருக்கும்.

எதிர்க்கட்சி விமர்சனம்
ஜோ பிடென் நிர்வாகம் ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றதை குடியரசுக் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் மிட்ச் மெக்கனெல் இதுபற்றி அளித்த பேட்டியில், 1975 ஆம் ஆண்டு சைகோனின் வீழ்ச்சியை விட ஆப்கானிஸ்தான் "மிகவும் மோசமாக" இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார். "ஏனெனில் நாங்கள் சைகோனை விட்டு வெளியேறிய பிறகு, வியட்நாமிய பயங்கரவாதிகள் எங்களை தாக்க திட்டமிட்டு காய் நகர்த்தவில்லை. ஆப்கனில் அப்படி நடக்கிறது. இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் ஒன்றாகும்," என்று அவர் கூறினார்.

எங்கேயிருந்தாலும் கண்காணிப்பு
அதேநேரம் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், அப்படியெல்லாம் அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டத்தை செயல்படுத்த முடியாது என்கிறார். "எங்களுக்கு தீங்கு செய்ய நினைக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தாக்குதல் நடத்தும் திறன் அமெரிக்காவுக்கு இப்போதும் உள்ளது" என்றார்.
சோமாலியா, ஏமன் போன்ற இடங்கள், சிரியா, லிபியா உட்பட அமெரிக்க ராணுவம் குவிக்கப்படாத இடங்களிலும் கூட நாங்கள் குறி வைக்கும் நபர்களை கண்காணிக்கும் திறமை எங்களிடம் உள்ளது. எனவே அமெரிக்கர்களுக்கு எதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications