ஜோ பிடன் வெற்றி பெற்றாலும்.. டிரம்ப் ஏற்க மறுத்தால் என்ன நடக்கும்? காத்திருக்கும் களேபரம்
வாஷிங்டன்: உலகமே எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே, கடும் இழுபறி சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 12.50 மணிக்கு, ஜோ பிடன் 238 ஓட்டுக்கள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்தார். டொனால்ட் ட்ரம்ப் 213 ஓட்டுக்களுடன் கடும் போட்டி கொடுத்து வருகிறார். குறைந்தபட்சம் 270 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மேல் பெறுவோர் அதிபராக முடியும்.
அதேநேரம் டிரம்புக்கு நேரடி ஓட்டு சதவீதம் அதிகமாக இருக்கிறது. பிரதிநிதிகள் தான் அதிபரை முடிவு செய்யப் போகிறவர்கள் என்பதால் ஓட்டு சதவீதம் பற்றி ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் பெரிதாகக் கவலைப்பட தேவை கிடையாது.
பொறுமையிழந்த டிரம்ப்.. அதிபர் தேர்தலில் இன்றே முடிவுகள் வராது.. சில நாட்கள் கூட ஆகும்..ஏன் தெரியுமா?
மாகாண அதிகாரம்
அமெரிக்க அதிபர் தேர்தல் பிற நாடுகளைப் போல கிடையாது. அங்கு மாகாணங்களுக்கு அதிகாரம் உள்ளது. நமது நாட்டில் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது என்று மாநில கட்சிகள் குற்றம் சாட்டுவதை பார்க்க முடியும். ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு குறைக்கப்படவில்லை. இதுதான் அங்குள்ள சிறப்பம்சம்.
டொனால்ட் டிரம்ப் விளையாடுவார்
எவ்வாறு ஓட்டுக்களை எண்ண வேண்டும் என்பது உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு மாகாணங்களுக்கும் தனி அதிகாரம் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எனவே இதை சாதகமாக டிரம்ப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஜோ பிடன், வெற்றி பெற்றாலும் முக்கியமான மாகாணங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு டொனால்டு டிரம்ப் அழுத்தம் கொடுத்து அவர்களது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஓட்டு தனக்கு கிடைக்குமாறு பார்த்துக் கொள்வார்.
உச்சநீதிமன்றம் செல்லும் வழக்கு
அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவார்கள் ஜனநாயக கட்சியினர். அது உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும். உச்சநீதிமன்றம் தனது விசாரணையின் போது , டிரம்ப் வெற்றி பெற்றாரா தோற்றாரா என்று நேரடியாக தீர்ப்பளிக்க போவது கிடையாது. உதாரணத்துக்கு பென்சில்வேனியா மாகாணத்தில் குடியரசு கட்சி மக்கள் பிரதிநிதி, டொனால்டு டிரம்ப்புக்கு வாக்களிக்குமாறு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நிர்பந்திக்க முடியுமா, முடியாதா என்பது பற்றி மட்டும் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். எனவே குழப்பம் நீடிக்கும். டிரம்ப் ஏற்கனவே தபால் வாக்குகளை சந்தேகித்து, தோல்வி ஏற்பட்டால், முடிவை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து டிரம்ப் பிடிவாதமாக இருந்தால், அது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும்.
அமெரிக்க காங்கிரசில் டுவிஸ்ட்
இதற்கு அடுத்தபடியாக வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்க காங்கிரஸ் கூடும்போது இன்னமும் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஓட்டுக்களையும் அமெரிக்க காங்கிரஸ் அப்போது உறுதி செய்யும். அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரெபரசென்டேட்டிவ் மற்றும் செனட் ஆகிய இரு அவைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். எனவே, ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவருக்கு எதிராக முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே 2021ம் ஆண்டில்தான் வெற்றியாளர் உறுதி செய்யப்படும்.
பெரிய வெற்றி தேவை
டொனால்ட் ட்ரம்ப், ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, நான் வெற்றி பெற்றால் பிரச்சினை இல்லை, தோல்வியடைந்தால் பிறகு நடக்கப் போவதைப் பாருங்கள் என்று தெரிவித்திருந்தார். எனவே அவ்வளவு ஈசியாக அவர் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார் என்று தெரிகிறது. இருப்பினும் ஜோ பிடன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இந்த பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பு கிடையாது. நெருக்கமான அளவில் வெற்றி பெற்றால்தான் டொனால்ட் ட்ரம்ப் என்னென்ன செய்வாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்படும். எனவே, ஜோ பிடன் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, அந்த வெற்றி பெரிய அளவில் இருக்க வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.