அமெரிக்க அதிபர் தேர்தலில் 59 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவு - வெள்ளை மாளிகை யாருக்கு?
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே 59 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை 59 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர். ஃபுளோரிடா, பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்புக்கு எதிராகவே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப் வெள்ளை மாளிகையை தக்கவைப்பாரா? அல்லது தேர்தலில் தோற்று அவர் சொன்னது போல நாட்டை விட்டே வெளியேறுவாரா பார்க்கலாம்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் அரசு சரியாகக் கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால், ஜோ பிடன் வெற்றி பெறுவார் எனக் கருத்துக் கணிப்புகளும் கூறி வருகின்றன
அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன்பிருந்தே வாக்களிக்கும் வசதி உண்டு. தேர்தலுக்கு 8 நாட்கள் உள்ள நிலையில், அங்கு இப்போது பூத்களில் வாக்காளர்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். கொரோனா காலத்திலும் கூட்டமாகச் சென்று வாக்களித்துள்ளனர்.
அக்டோபர் 25ஆம் தேதி வரை 59 மில்லியன் மக்கள் அதாவது 5கோடியே 70 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் முன்கூட்டியே பதிவான 57 மில்லியனை விட அதிகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த தேர்தலில் 130 மில்லியன் பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில் இது 150 மில்லியனாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சிதான், மக்களிடம் முன்கூட்டியே வாக்களிக்குமாறு தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தது. எனவே, இந்த அதிகமான வாக்குப்பதிவு ஜோ பிடனுக்கு சாதகமாக இருக்கலாமா என்ற பரபரப்பான விவாதங்களும் நடைபெற்று வருகிறது.
உலகில் 4 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 85 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். அதிபராக இருந்த ட்ரம்ப் கொரோனா நோய் தொற்றினை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
நோய் தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் பல லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்பின் முன்யோசனை இல்லாத அலட்சியமான முடிவுகளால் மக்கள் பல துன்பங்களை சந்தித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எதிர்கட்சியினரின் மிக முக்கியமான ஆயுதமே கொரோனாதான்.
திட்டமிடப்படாத லாக்டவுன் வேலையிழப்பை ஏற்படுத்தியது என்றால், யோசனையின்றி லாக்டவுனை நீக்கியதால் நோய் பரவல் தீவிரமடைந்தது. வேலையிழந்தவர்களுக்கு மானியம் வழங்கினாலும் அது யானைப்பசிக்கு சோளப்பொறி போலதான் என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டு. கடைசியில் அதிபர் ட்ரம்புக்கே நோய் தொற்று ஏற்பட்டதுதான் மிச்சம்.
ஜோ பிடன் தனது தேர்தல் வாக்குறுதியில் இலவச கொரோனா தடுப்பூசி, நோய் தொற்று சோதனை கூடங்கள் அமைத்து இலவச பரிசோதனை நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். ட்ரம்புக்கு எதிராக பல முனை தாக்குதல்கள் நடத்தி வருகிறார் ஜோ பிடன். இந்த தாக்குதல்களை முறியடித்து ட்ரம்ப் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையை தக்கவைப்பாரா? அல்லது தோல்விக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறுவாரா பார்க்கலாம்.