"பிரச்சனை பண்றதே சீனாவுக்கு வேலையா போச்சு".. அருணாச்சல் மோதல்.. இந்தியாவிற்காக களமிறங்கிய அமெரிக்கா
வாஷிங்டன்: அருணாச்சலப் பிரதேச எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, அனைத்து பிராந்தியங்களிலும் பிரச்சினை செய்வதையே சீனா வழக்கமாக கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், இந்தியா - சீனா இடையே தற்போது நடந்து வரும் எல்லைப் பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தவாங் விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குட்டு வாங்கி ஓடிய சீனா
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் பகுதி என சீனா நீண்டகாலமாக உரிமைக் கொண்டாடி வருகிறது. அவ்வப்போது அருணாச்சலப் பிரதேச எல்லைக்குள் வந்து சீன ராணுவம் முகாமிடுவதும், பின்னர் இந்திய ராணுவம் வந்த பிறகு தலைதெறிக்க ஓடுவதும் அந்நாட்டுக்கு வழக்கமாகி விட்டது. கடந்த 2006-ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேச எல்லைக்குள் வந்து இது எங்கள் பகுதி என பிரச்சினையில் ஈடுபட்ட சீனப் படையினரை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இதேபோல், லடாக்குள் 2020-இல் நுழைந்து அடி வாங்கிய வரலாறும் சீனாவுக்கு உண்டு. இந்த சூழலில், கடந்த 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 200-க்கும் மேற்பட்ட சீனப் படையினரை 50 இந்திய ராணுவ வீரர்கள் அடித்து துரத்தியுள்ளனர்.

எல்லையில் போர்ப் பதற்றம்
இந்திய ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டதால் சீனா கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அருணாச்சல் எல்லையை ஒட்டிய தங்கள் பகுதிகளில் ராணுவத் துருப்புகளை சீனா குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக அருணாச்சல எல்லையில் இந்தியாவும் படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்திய போர் விமானங்களும் இரவு பகலாக அருணாச்சல் வான் பகுதியை வட்டமடித்து வருகின்றன.

"உன்னிப்பாக கவனிக்கிறோம்" - அமெரிக்கா
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா - சீனா இடையே நடைபெற்று வரும் எல்லைப் பிரச்சினையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அருணாச்சல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தொடர்ந்து சீனா படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதையும், ராணுவக் கட்டமைப்புகளை நிறுவி வருவதையும் அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளது.

"சீனாவுக்கு இதே வேலையா போச்சு"
அமெரிக்காவின் நட்பு நாடுகளிடம் தொடர்ந்து பிரச்சினை செய்வதையும், அந்நாடுகளை தூண்டி விடுவதையும் ஒரு வேலையாக சீனா செய்து வருகிறது. அருணாச்சல் விவகாரத்தை பொறுத்தவரை, பிரச்சினையை சுமூகமாக முடிப்பதற்காக சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து ராணுவ வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். இந்த பிரச்சினையை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அமெரகிக்காவின் விருப்பம் ஆகும். இவ்வாறு தனது அறிக்கையில் பென்டகன் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications