"போர் குற்றவாளி புதின்.." அமெரிக்க செனட் சபையில் நிறைவேறிய தீர்மானம்! விசாரணைக்கு வலியுறுத்தல்
வாஷிங்டன்: உக்ரைன் மீதான போர் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினிடம் விசாரணை நடத்த கோரும் தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 3வது வாரமாக போர் புரிந்து வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெடிக்கும் குண்டுகள், வானில் இருந்து பாயும் ஏவுகணைகளால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
பதிலடி கொடுக்கும் ரஷ்யா! அமெரிக்க அதிபர் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ மீது பொருளாதார தடைகள் அறிவிப்பு
குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து ரஷ்யா மீது குற்றம்சாட்டி வருகிறார். ரஷ்ய படைகள் மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புகள் மீது குண்டுகளை வீசுகின்றன. அப்பாவி மக்களை கொன்று குவிகக்கிறது. ரஷ்யா போர் நடவடிக்கையில் பின்பற்ற வேண்டிய விதிகளை மீறி போர் குற்றங்கள் புரிந்து வருகிறது என கூறினார். உக்ரைனில் பிற அமைச்சர்களும் இதை முன்வைத்துள்ளனர்.
தனித்து விட முயற்சி
ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உலக அரங்கில் ரஷ்யாவை தனித்து விட திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் ரஷ்யா எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்கா தரப்பில் உலக நாடுகளை ஓரணியில் திரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்நிலையில் தான் உக்ரைனில், ரஷ்யா போர் குற்றம் புரிவது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் கொண்டு வந்தார். குடியரசு கட்சி, ஜனநாயக கட்சிகளின் செனட்டர்களின் ஒருமித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதின் பொறுப்பேற்க...
இதுகுறித்து ஜனநாயக கட்சியின் செனட் சபையின் பெரும்பான்மை தலைவராக உள்ள சக் ஷூமர் கூறுகையில், ‛‛உக்ரைன் மக்களுக்கு இழைக்கும் அநீதி, அட்டூழியங்களுக்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது. இதனால் குடியரசு, ஜனநாயக கட்சிகள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றுவது அவசியமாகி உள்ளது'' என்றார்.
Recommended Video
வெளிப்படையான ஆதரவு
இந்த தீர்மானம் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உள்பட உக்ரைன் மீதான போர் குற்றங்கள் தொடர்பான அனைத்து விசாரணைக்கும் ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்க செனட் சபை அறிவித்துள்ளது. மேலும் உக்ரைன் போர் குற்றங்கள் தொடர்பாக ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின், அவரது பாதுகாப்பு கவுன்சில், ராணுவ படை தலைவர்களிடம் விசாரிக்க ஆதரவு அளிப்பதை அமெரிக்க செனட் சபை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.