650 மில்லியன் டாலர் மதிப்பிலான 280 அதிநவீன விமான ஏவுகணைகள்... செளதி அரேபியாவுக்கு வழங்கும் யு.எஸ்.
வாஷிங்டன்: ஏமன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்தும் ஆளில்லா விமான தாக்குதல்களை (ட்ரோன் தாக்குதல்களை) எதிர்கொள்ள செளதி அரேபியாவுக்கு 650 மில்லியன் டாலர் மதிப்பினா 280 அதிநவீன விமான ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Recommended Video
ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து டிரோன்கள் தாக்குதல்களை செளதி அரேபியா எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய டிரோன்களை எதிர்கொள்ள ஏற்கனவே செளதி அரேபியாவுக்கு அமெரிக்கா ஏவுகணைகளை வழங்கி உள்ளது.

செளதிக்கு நவீன ஏவுகணைகள்
இருப்பினும் தற்போது இத்தகைய தாக்குதல்களை முறியடிக்க AIM-120C என்கிற அதிநவீன 280 வான்வழி விமான ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க உள்ளது. எல்லை கடந்து செளதி அரேபியா எதிர்கொள்ளும் தாக்குதல்களை முறியடிக்க இது உதவும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை.

மிகப் பெரிய ஆயுத உதவி
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின்னர் செளதி அரேபியாவுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய அளவிலான ஆயுத உதவி இதுவாகும். ஏமனுனான செளதி அரேபியாவின் மோதலை முடிவுக்கு கொண்டு வரவும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ளவும் செளதி அரேபியாவுக்கு இந்த ஏவுகணைகள் உதவும் என்கிறது அமெரிக்கா.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள்
கடந்த மாதம் செளதி அரேபியாவின் ஜிசான் நகரில் அமைந்துள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் ஏமன் நாட்டு பகுதியில் இருந்து கிளர்ச்சியாளர்களால் எல்லை தாண்டிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் செளதி அரேபியாவை சேர்ந்த 6 பேரும் வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் விமான நிலையமும் கடும் சேதமடைந்தது.

செளதி கூட்டுப் படை
தற்போது ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதியின் அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஏமனின் மரிப் நகரின் தெற்கே அபியா பகுதியில் செளதி தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதல்களில் 160 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த மரிப் நகருக்கான யுத்தத்தில் இதுவரை 1000க்கும் அதிகமான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications