ஜனநாயகத்தை நிலைநாட்டுங்கள்... நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்... அமெரிக்கா அட்வைஸ்!
வாஷிங்டன் : இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட அந்நாட்டு அதிபரை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய சிறிசேனாவின் முடிவால் இலங்கையில் அரசியல் நெருக்கடியும் அசாதாரண சூழலும் நிலவும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி மற்றும் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி முடிவுக்கு வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கிவிட்டு தமது சொந்தக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமராக வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சிறிசேனா.
எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் சிறிசேனாவும், ராஜபக்ஷவும் தற்போது ஓரணிக்கு வந்துவிட்டனர். மாற்று கட்சியில் இருந்தாலும் இணைந்திருந்த சிறிசேனாவும் ரணிலும் எதிரெதிர் அணியில் ஆகிவிட்டனர். ரணிலை பதவி நீக்கம் செய்ததோடு கடந்த சனிக்கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தையும் நவம்பர் 16 வரை தற்காலிகமாக முடக்கியுள்ளார் சிறிசேனா. இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி சூழல் இலங்கையில் நிலவுகிறது.
ரணில் நீக்கம் ஏன்?
தம்மை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது அரசியல் சாசனப்படி செல்லாது, தானே பிரதமராக நீடிப்பதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து வருகிறார். இதனிடையே இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பதாகவும் அவருக்குரிய சிறப்பு அந்தஸ்து தொடரும் என்றும் அறிவித்துள்ளார். ரணிலை நீக்கம் செய்ததற்கான காரணம் குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றி அதிபர் சிறிசேனா தன்னைக் கொல்ல சதி நடந்ததாகவும், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த திட்டமிட்டதாலும் வேறு வழியின்றி ரணிலை பதவிநீக்கம் செய்து ராஜபக்ஷேவை பிரதமராக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அதிர வைத்த துப்பாக்கிச்சூடு
தலைவர்களின் குற்றச்சாட்டுகளால் அடுத்தடுத்த அரசியல் பரபரப்புகளை சந்தித்து வரும் இலங்கையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் சூட்டை அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரனதுங்கா தன்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சிறிசேனாவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு எதிர்முழக்கமிட்டதால் ரனதுங்காவின் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பரபரப்பு நிலவுகிறது.
எதற்காக துப்பாக்கிச்சூடு?
அதிகாரப் போட்டியால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சம்பவங்கள் இலங்கை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தம்மை எதிர்ப்பவர்களை மிரட்டும் தொணியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியதா என்றும் பதவிநீக்கம் செய்யப்பட்டவர்கள் கருதுகின்றனர்.
|
அமெரிக்கா வலியுறுத்தல்
இந்நிலையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு இலங்கை அதிபருக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க உள்துறை செய்தி தொடர்பாளர் ஹேதர் நௌரட் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிபர் சிறிசேனா, சபாநாயகருடன் கலந்து ஆலோசித்து உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் . ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இலங்கையில் அதிகாரத்தில் இருக்க வேண்டும். இலங்கை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் விருப்பப்படியே பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.