"கஜினி முகமது போல.." 14 முறை தோல்வி.. 15ஆவது சுற்றில் வென்ற மெக்கார்த்தி! அமெரிக்க சபாநாயகராக தேர்வு
வாஷிங்டன்: அமெரிக்காவில் 14 சுற்று வாக்குப்பதிவில் தொடர்ந்து தோல்வியடைந்த குடியரசுக் கட்சியின் கெவின் மெக்கார்த்தி, ஒரு வழியாக இப்போது போராடி வென்றுள்ளார்.
கடந்த 2019இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அதிபர் பைடன் ஆட்சியை அமைத்தார். அங்கு அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என்றாலும் கூட, இரண்டு ஆண்டுகளில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெறும்.
புதிய அதிபர் பதவிக்கு வந்து இரு ஆண்டுகளில் நடைபெறும் தேர்தல் என்பதால் இது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் அங்கு மிட் டேர்ம் தேர்தல் நடத்தப்பட்டது.

அமெரிக்கா
அமெரிக்க நாடாளுமன்றத்திலும் செனட் சபை மற்றும் பிரதிநிதிகளின் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன. இந்த மிட் டேர்ம் தேர்தலுக்கு முன்பு, இரு அவைகளிலும் ஜனநாயக கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தது. இதனால் அங்குச் சிக்கல் இல்லாமல் இருந்தது. ஆனால், இந்த மிட் டேர்ம் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. மொத்தம் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்குத் தேவை 218 இடங்களில் குடியரசு கட்சி 222 இடங்களையும் ஆளும் பைடனின் ஜனநாயக கட்சி 212 இடங்களையும் பெற்றிருந்தன.

கெவின் மெக்கார்த்தி
பிரதிநிதிகள் சபையில் யார் பெரும்பான்மையோ அவர்களுக்குச் சபாநாயகர் பொறுப்பு கிடைக்கும். ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்ததால் பதவியில் இருந்து நான்சி பெலோசி பதவி விலகினார். அமெரிக்காவில் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து புதிய சபாநாயகரைத் தேர்வு செய்ய நடவடிக்கைகள் ஆரம்பித்தன. குடியரசுக் கட்சி சார்பில் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்டார். பெரும்பான்மை இருப்பதால் எளிதாக கெவின் மெக்கார்த்தி வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

தொடர் தோல்வி
இருப்பினும், சொந்த கட்சியினரே காலை வாரி அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. இதனால் அவரால் வெல்ல முடியவில்லை. அங்கு கடந்த 100 ஆண்டுகளில் சபாநாயகர் தேர்தல் எப்போதும் முதல் சுற்றிலேயே முடிந்துவிடும். ஆனால், இந்த முறை பல சுற்று வாக்குப்பதிவுக்கு பிறகும் அவரால் வெல்ல முடியவில்லை. அங்குள்ள குடியரசு கட்சி பல அதிருப்தியாளர்களைக் கொண்டது. இதில் பழமை வாதிகளுக்கும் புதுமையை விரும்பும் குடியரசு கட்சியினருக்கும் இடையே உட்கட்சி மோதல் தொடர்ந்தது. இதனால் 13 சுற்று வாக்குப்பதிவிலும் அவரால் வெல்ல முடியவில்லை. இதையடுத்து குடியரசு கட்சியினரைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் கெவின் மெக்கார்த்தி இறங்கினார்.

ஒரே ஒரு வாக்கு
இதையடுத்து நடந்த 14ஆவது சுற்று வாக்குப்பதிவில் மெக்கார்த்தி வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் புளோரிடா எம்பி மாட் கேட்ஸ் மாற்றி வாக்கைப் பதிவு செய்யவே, 14ஆவது சுற்றிலும் மெக்கார்த்தி தோல்வியைச் சந்தித்தார். இதையடுத்து புளோரிடா எம்பி மாட் கேட்ஸ் அறைக்குச் சென்று நேரடியாகவே அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் மெக்கார்த்தி இறங்கினார். முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவு மெக்கார்த்திக்கு இருப்பதால், குடியரசு கட்சியில் இருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களே மெக்கார்த்தியை ஆதரிக்கத் தயங்கினர். இருப்பினும், அனைத்தையும் சமாளித்து ஒரு மாதிரி பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைத் திரட்டினார்.

ஒரு வழியாக வெற்றி
இந்தச் சூழலில் நடந்த 15ஆவது சுற்று வாக்குப்பதிவில் ஒரு வழியாகப் பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைப் பெற்று வென்றார் மெக்கார்த்தி. இதன் மூலம் 57 வயதான மெக்கார்த்தி இப்போது பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்குக் கடந்த 160 ஆண்டுகளில் சபாநாயகர் தேர்தலுக்கு இத்தனை சுற்று வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறையாகும். அங்குள்ள அதிகார கட்டமைப்பு முறைப்படி அதிபருக்கு அடுத்தபடியாக சபாநாயகருக்கு அதிகப்படியான பவர் உள்ளது. இப்படி அதிக பவர் உள்ள பதவி எதிர்க்கட்சிக்குச் சென்றுள்ளது

ஏன் முக்கியம்
அமெரிக்கச் சட்டத்தின் படி எந்தவொரு புதிய சட்டத்தையும் கொண்டு வரப் பிரதிநிதிகளின் சபை, செனட் சபை மற்றும் அதிபரின் ஒப்புதல் தேவை. எதிர்க்கட்சியினருக்கு எதாவது ஒரு இடத்தில் பெரும்பான்மை இருந்தாலும் கூட புதிய சட்டங்களைக் கொண்டு வர விடாமல் அவர்களால் முடக்க முடியும். இந்தச் சூழலில் எதிர்க்கட்சியினருக்குப் பெரும்பான்மை மட்டுமின்றி, மெக்கார்த்திக்கு சபாநாயகர் பதவியும் கிடைத்துள்ளது. இதனால் வரும் காலங்களில் அமெரிக்க அதிபர் பைடன் விரும்பும் சட்டங்களை எல்லாம் கொண்டு வர முடியாது. அதை நிச்சயம் முடக்கிவிடுவார்கள்.












Click it and Unblock the Notifications