ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள்..தைத்தேர் திருவிழா முகூர்த்தக்கால் கோலாகலம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பிரசித்திபெற்ற திருவிழாவான வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழாவை விட பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தை தேரோட்டம் முக்கியமானதாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்த திருத்தேரோட்டம் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. பூபதித்திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தைத்தேர் திருவிழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழா நடைபெறும். முக்கிய விழாக்களில் தைத்தேர் திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழா வருகிற 26ஆம்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வரை 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது.
தைத்தேரோட்ட விழாவை முன்னிட்டு தெற்கு உத்திர வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. அப்போது, முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர். இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தைத்தேரோட்ட திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் 2ஆம் நாளான 27ஆம்தேதி காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும், 28ஆம்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 29ஆம்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும் நம்பெருமாள் காட்சி அளிப்பார்.
ஜனவரி 30ஆம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 31ஆம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். பிப்ரவரி 1ஆம் தேதி நெல் அளவு கண்டருளுகிறார். 2ஆம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 3ஆம் தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு காலை 4.30 மணிக்கு வருகிறார். காலை 4.30 மணிமுதல் காலை 5.15 மணிவரை தனுர் லக்னத்தில் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 4-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான பிப்ரவரி 5ஆம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.