பஞ்சு விலை வரலாறு காணாத விலை உயர்வு... முன்பே உணர்த்திய சிவன்மலை ஆண்டவர் - தப்பாத கணிப்பு
சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவு பெட்டியில் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு வைத்து வழிபட்டதால் பஞ்சு, நூல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
திருப்பூர்: தமிழகத்தில் பஞ்சு விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. பஞ்சு விலை உயரக்கூடும் என்பதை சில மாதங்களுக்கு முன்பே உணர்த்தியுள்ளார் சிவன்மலை ஆண்டவர். சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மார்ச் மாத இறுதியில் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் சோழி ஆகியன வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் நினைத்தது போலவே பருத்திப்பஞ்சு தாறு மாறாக விலை உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன் மலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது.
முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். "சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்." என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில்
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் குறிப்பிடும் பொருள், இந்தப் பெட்டியில் வைத்து பூஜிப்பது, வழக்கமாக உள்ளது. முருக கடவுள், பக்தர்கள் கனவில் தோன்றி தெரிவிக்கும் பொருட்களை வைத்து பூஜை செய்து, பின்னர் மூலவர் சன்னிதிக்கு எதிரே உள்ள தூணில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம்.

ஆண்டவன் உத்தரவுப்பெட்டி
ஆண்டவன் உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. இந்தப் பொருள் தேசிய அளவில் ஏற்றமும், பெறலாம், இறக்கமும் பெறலாம் என்பதற்கான குறியீடாக, இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருளை இப்பகுதி மக்கள் கவனித்து வருகின்றனர்.

தப்பாத கணிப்பு
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் இதற்கு முன்பு ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்களை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி தோட்டாக்கள் வைத்து பூஜை செய்த போது இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டது. மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படைந்தது. மற்றொரு முறை மண் வைத்து வழிபட்ட போது குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பேரழிவு உருவானது. மஞ்சள் வைத்து பூஜை செய்த போது தங்கம் போல மஞ்சள் விலை உயர்ந்தது. தண்ணீர் வைத்து பூஜை செய்த போது சுனாமி ஏற்பட்டது. பின்னர் ஒருமுறை நீர் வைத்து வழிபட்டபோதுதான் கேதார்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இப்போது பஞ்சு வைத்து பூஜை செய்யப்பட்டதால் பருத்தி பஞ்சு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

பருத்திப்பஞ்சு வைத்து பூஜை
கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பானுமதி என்ற பக்தரின் கனவில் தோன்றியதாக கூறி, நேற்று இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, எதிர்காலத்தை கணிக்க பயன்படுத்தும் சோளி ஆகியன வைத்து வழிபாடு நடைபெற்றது.

நூல் விலை உயர்வு
தமிழகத்தில் பஞ்சு, நூல் விலை உயர்வினால் ஜவுளித்தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் பருத்தி நூல் தவிர வேறு நூலுக்கு மாற தயாராகி வருகின்றனர். எனவே செயற்கை நூலில் ஆடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் அவசியத்தை இந்த பொருட்கள் உணர்த்துவதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

பஞ்சு விலை வரலாறு காணாத விலை உயர்வு
தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 40 சதவீதம் வரை பருத்திப்பஞ்சு விலை உயர்ந்துள்ளது. ஒரு ஆண்டுக்குள் பருத்தி விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ. லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் பஞ்சு விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறை கடும் பாதிப்படைந்துள்ளது. பஞ்சு விலையைப் பொறுத்தவரை கேள்வி ஒன்றுக்கு 37 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை இருந்த நிலையில் தற்போது ஒரு லட்சம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications