எட்டுக்குடி முருகன் கோவில் கும்பாபிஷேகம்..சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்
பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
நாகப்பட்டினம்: பிரசித்திப்பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
முருகனின் ஆதிபடை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்.
எட்டுகுடி என்ற ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்குவளை வட்டத்தில் கற்சாலையில் சீராவட்டம் என்ற சிற்றூர்க்கருகே உள்ளது. சூர சம்ஹாரம் செய்வதற்கு முருகப்பெருமான் இங்கிருந்து புறப்பட்டதாகக் கூறுகிறது தல புராணம். இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிராகாரத்தில் முருகனுடன் சூரபத்ம வதத்திற்குத் துணையாகச் சென்ற 9 வீரர்களுக்கும் சிலைகள் உள்ளன.
கந்த புராணத்தில் கூறியுள்ளபடி இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் சூரபதுமனை அழிப்பதற்கு முன்பாகத் தேவேந்திரனாகிய மயில் மீது ஏறி அமர்ந்துள்ள மூர்த்தமாகக் காணப்படுகிறார். அம்பறாத் தூணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் மூலவர் அருள்பாலிக்கிறார்.
இந்தத் தலத்தில் வேண்டுவார்கள் வேண்டும் வரத்தை அளிப்பவராக அருள்புரிகிறார் முருகப் பெருமான். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும் அருள்புரிகிறார் முருகன். குழந்தை வரம் நிறைவேறும்போது மணி கட்டி நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்
இந்த ஆலயத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 20ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 23ஆம் தேதி முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி எட்டு கால சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பரிவார தெய்வங்களின் ஆலய குடமுழுக்கு நேற்று காலை நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேக தினமான இன்று, பிரதான விநாயகா், ஸௌந்தரேச்வர ஸ்வாமி, ஆனந்தவல்லி அம்பாள், ராஜகோபுரம், அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சுப்ரமணிய சுவாமி விமான திருக்குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி இராஜகோபுரம், அம்பாள்,சௌந்தரேசுவரர், மூலவரான சுப்பிரமணிய சுவாமி ஆலய கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு,மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் ஓய்ந்த பிறகு காலை 11 மணியளவில் துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் சார்பில் பாதுகாப்பு பணிக்காக 24 கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.