கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் பழனி..18ஆம் தேதி முதல் பூஜைகள்..தரிசனத்திற்கு தயாராகும் பக்தர்கள்
திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க பணிகள் வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ளன. யாகசாலை பூஜைகள் 23ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. கோயிலுக்கு 17 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாக விளங்குவது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் இக்கோயிலில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

இதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு பழனி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடத்தப்படவிலலை. பல்வேறு தரப்பினரும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாலாலயம் நடைபெற்றது. ஆனால், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி கும்பாபிஷேக பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது.
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். இதனையடுத்து அறநிலையத்துறை அமைச்சர் பழநி கோயிலை ஆய்வு செய்து கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. ரூ.16 கோடி செலவில் கட்டுமானம் மற்றும் அழகுபடுத்துதல் பணி நடைபெறுகிறது.

ரூ.5 கோடியில் வெள்ளி மற்றும் தங்கத்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் நடைபெறுகிறது. மொத்தம் 88 பணிகள் நடைபெறுகின்றன. இதில் 26 பணிகள் கோயில் நிர்வாகம் மூலமாகவும், 62 பணிகள் உபயதாரர்கள் மூலமாகவும் நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்த பின்னர் அந்த நாளில் நடத்தக்கூடாது என்றும் மூலவருக்கு மருந்து சாத்தாமல் கும்பாபிஷேகம் நடத்துவது ஆகம விதிகளை மீறும் செயல் என்றும் அர்ச்சகர்கள் குற்றம் சாட்டினர்.
அர்ச்சகர்களின் புகார்களுக்கு மத்தியில் கும்பாபிஷேக பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 25ஆம் தேதி முகூர்த்தக்கால் நாட்டப்பட்டது. மலைக்கோவில் மேல்பிரகாரத்தில் உள்ள பாறைவேல் மண்டபம் மற்றும் கார்த்திகை மண்டபம் ஆகிய பகுதிகளில் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் முகூர்த்தக்கால் கம்பத்தை சுமந்து வந்தனர். மூலவருக்கு மருந்து சாத்துதல் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
ஆகம விதிகள் என்பது ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல. நமக்குநாமே வகுத்துக்கொண்டது. எந்த ஒரு பணி செய்தாலும், அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. யாருடைய தலையீடும் இல்லாமல் மூத்த அர்ச்சகர்களோடு கலந்துபேசி ஆகம விதிக்கு உட்பட்டே கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதனிடையே தை பொங்கல் பண்டிகை முடிந்து வரும் 18ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் துவங்க உள்ளது. 23ஆம் தேதி முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 26ஆம் தேதி காலை 9.50 மணி முதல் 11 மணி வரை பாதவிநாயகர் முதல் இரட்டை விநாயகர் வரை உள்ள பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தின் இறுதிப்பணியாக மூலவருக்கு மருந்து சாத்துதல் தொடர்பாக தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. பக்தர்கள் சிரமமின்றி குடமுழுக்கை தரிசிக்க கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications