சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை..நடை நாளை திறப்பு..மேல் சாந்திகள் பதவியேற்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் பதவியேற்பு விழாவும் 16ம் தேதி மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை 1ஆம் தேதி முதலே பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக விரதம் இருப்பார்கள். கார்த்திகை 1ஆம் தேதி நாளை பிறக்கிறது.
இதனையடுத்து நாளை மாலை 5 மணி முதல் நடை திறக்கப்பட உள்ளது. நாளை முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இம்முறை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனின் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் அருகே கோவில் கறிவிருந்தில் குடி போதையில் தகராறு- துப்பாக்கி சூடு நடந்ததால் பரபரப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்பட உள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றுகிறார். அதன் பிறகு, உபதெய்வ கோவில்களில் தீபங்கள் ஏற்றப்படும். பின் மேல்சாந்தி 18ம் படி முன் உள்ள பள்ளத்தில் அக்னியை ஊற்ற, பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி வரும் வெர்ச்சுவல் க்யூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி தரிசன அனுமதி துவங்கும். தொடக்க நாளில் சிறப்பு பூஜைகள் இருக்காது.
மேல் சாந்தி பதவியேற்பு
சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்ட ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் பதவியேற்பு விழாவும் 16ம் தேதி மாலை நடைபெறும். விருச்சிக ராசிக்கு முதல் நாளான நவம்பர் 17ம் தேதி முதல் சபரிமலை மற்றும் மாளிகைப் புறம் ஆகிய இரு கோவில்களையும் புதிய மேல்சாந்திகள் திறப்பர். மண்டல திருவிழா காலம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை நடைபெறும். டிசம்பர் 27ல் மண்டல பூஜை நடந்து முடிந்ததும் நடை அடைக்கப்படும்.
மகரவிளக்கு பூஜை
தொடர்ந்து மகரவிளக்கு உற்சவத்திற்காக சபரிமலை கோவில் நடை டிசம்பர் 30ம் தேதி மீண்டும் திறக்கப்படும். 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும். ஜனவரி 20ம் தேதி முதல் விளக்கு பூஜைக்காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும். சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கூடுதல் பாதுகாப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இம்முறை கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்களை பணியில் அமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.