தைப்பூசம்..தேரோட்டமும்.. தெப்பத்திருவிழாவும்.. தமிழகம் முழுவதும் கோலாகலம்
தமிழகம் முழுவதும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவமும், தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சென்னை: ஊர் கூடி தேர் இழுத்தால் உற்சாகம்தான். தெப்பத்தில் உலா வரும் தெய்வங்களை காண்பது மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடியது. தை மாதத்தில் தமிழ்நாட்டில் பல ஊர்களில் தேர் திருவிழாவும் தெப்ப உற்சவமும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் வலம் வந்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 5 தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், வள்ளி தெய்வானை, மகாலிங்கசுவாமி, பிரகத் குஜாம்பிகை, சண்டிகேஸ்வரர் அதிகாலை 5 மணிக்கு அவரவர் தேர்களில் எழுந்தருளினர். காலை 10 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சாமிகள் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். மகாலிங்கா மகாலிங்கா என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அம்பாள் பிரகத் குஜாம்பிகை, சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை தொடங்கி பங்குனி மாதம் வரை திருவிழாக்கள் நடைபெறும். தை மாத தெப்ப உற்சவம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி தொடங்கின. ஒவ்வொரு நாளும் மீனாட்சியும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் சன்னதியில் இருந்து எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தனர்.
திருவிழாவின் போது சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் நடைபெறுவது வழக்கம். அதில் வலைவீசி அருள்பாலித்த லீலைகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நாளில் பெரியார் பேருந்து நிலையம் அருகே எல்லீஸ் நகர் பாலத்திற்குக் கீழே உள்ள தெப்பக்குளத்திற்குச் செல்வது வழக்கம்.
பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வலை வீசி அருளிய திருவிளையாடல் லீலை நடைபெற்றது. அப்போது இரண்டு வெள்ளி மீன்களை வலை வீசி பிடிப்பது போன்று பிடித்து அதனைத் தாம்பூலத்தில் வைத்து சுந்தரேஸ்வரர் சுவாமிக்குச் சமர்ப்பித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் ஒன்பதாவது நாளான்று தை பூசத்திற்கு முதல்நாள் கதிர் அறுப்புத் திருவிழா நடைபெற்றது. இதற்கான மீனாட்சி சுந்தரேஸ்வரர் அனுப்பானடிக்கு அருகே மருதநிலப் பகுதியான சிந்தாமணி பகுதிக்கு வருகை தந்தனர். தை மாதத்தில் விளைந்த நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்வதைப்போல மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் அறுவடை செய்தனர். இரவு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை அம்மன், அம்மன் சன்னதியில் இருந்து சட்ட தேரில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இன்றைய தினம் தெப்ப உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு சுந்தரேஸ்வரர் சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் அதிகாலை கோயிலிலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கோலத்துடன் தெப்பக்குளத்தில் எழுந்தருளினர். காலை நேரத்தில் இரண்டு முறையும் இரவு நேரத்தில் ஒரு முறையும் இருவரும் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். தெப்ப திருவிழாவை முன்னிட்டு வண்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகப்படி திருவிழா நடைபெற்று வருகிறது.முக்கிய விழாவான தேரோட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. நாளை காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். பின்னர் காலை 10.30 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று பின்னர் நிலையை வந்தடையும்.