Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்டர் நாயனார்..பிள்ளையார் தமிழகம் வந்தது இப்படித்தானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாட்டுக்கு பிள்ளையார் சுழி போட்ட சிறுத்தொண்டர் நாயனார் கதையைப் பற்றி பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆவணி மாத வளர்பிறையில்
வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

செவ்வாய்கிழமை சங்கடஹர சதுர்த்தி

செவ்வாய்கிழமை சங்கடஹர சதுர்த்தி

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.

 இறை வழிபாடு

இறை வழிபாடு

சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த சமயங்கள் என்றால் சைவம், சமணம் மற்றும் பௌத்தம் என மூன்று மட்டுமே. அதிலும் சைவத்தை எடுத்துக்கொண்டால், சிவன் திரிபுராந்தக மூர்த்தியாகவும், முருகன் போர்க்கடவுளாகவும், திருமாலும் வழிபடப்பட்டு வந்தனர். அதைத் தவிர வேறு சமயம், வேறு தெய்வம் என எந்த கடவுளையும் பழந்தமிழ் சமுதாயத்தினர் வழிபட்டு வந்ததாக ஆய்வுக் குறிப்புகள் பெரிதாக எதுவும் இல்லை. இக்காலத்தில் சமண, பௌத்த மதம் போல் சைவ சமயம் வளர்ச்சி அடையாமலேயே இருந்து வந்தது. இதன் காரணமாகவே களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சைவ சமயம்

சைவ சமயம்

பின்னாளில், அதாவது பல்லவ மன்னனான சிம்ம விஷ்ணு களப்பிரர்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும் கூட இங்கு காட்சிகள் மாறவில்லை. சிம்ம விஷ்ணுவிற்கு பின்பு வந்த முதலாம் மகேந்திரவர்மன் கூட சமண சமயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை சைவ சமயத்திற்கு கொடுக்கவில்லை. இதை உணர்ந்த சைவ சமயக்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர், மகேந்திரவர்மனுக்கு சைவ சமயத்தின் தொன்மையையும், பெருமையையும் எடுத்துச் சொல்லி அவரை சைவ சமயத்திற்கு மாற்றினார்.

வாதாபி மீது படையெடுப்பு

வாதாபி மீது படையெடுப்பு

இந்த நேரத்தில் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த வாதாபியை தற்போது பாதமி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு வந்த சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி(இவர்தான் வடக்கில் ஆட்சி செய்த ஹர்ஷவர்த்தனரையும் தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது), முதலாம் மகேந்திரவர்மனைக் கொன்று தமிழகத்தின் வடபகுதியைக்
கைப்பற்றினார். இதையடுத்து ஆட்சிக்கு வந்த மாமல்லன் எனும் முதலாம் நரசிம்மவர்மன் தந்தையின் தோல்விக்கு பழிவாங்கக் காந்திருந்தான்.

வரலாற்று வெற்றி

வரலாற்று வெற்றி

அந்த சமயத்தில் மீண்டும் காஞ்சியின் மீது படையெடுத்து வந்த இரண்டாம் புலிகேசியை கி.பி.642-ஆம் ஆண்டு, காஞ்சிக்கு அருகிலுள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் தோற்கடித்ததோடு நில்லாமல், வாதாபி வரை துரத்திச் சென்று இரண்டாம் புலிகேசியை கொன்றான். நரசிம்ம பல்லவனின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு முக்கிய காரணம், அவனது படைத்தளபதியாக இருந்து வெற்றிக்கு துணை நின்ற பரஞ்சோதி என்பவர் தான்.

விநாயகர் வருகை

விநாயகர் வருகை

படைத்தளபதியான பரஞ்சோதி சிறந்த தளபதியாக மட்டுமில்லாமல், மிகச் சிறந்த சிவத்தொண்டராகவும் இருந்தார். இதன் காரணமாக, தான் பெற்ற வெற்றியின் அடையாளமாக வாதாபியில் இருந்து பிள்ளையார் சிலையை தன்னோடு எடுத்து வந்தார். எப்படி மௌரியப் பேரரசரான அசோகச் சக்கரவர்த்தி கலிங்கப்போரில் கண்ட மரணங்களைப் பார்த்து வெறுத்து மனம் மாறி போரைக் கைவிட்டாரோ, அதே போல் பரஞ்சோதியும் போரை வெறுத்து ஒதுக்கி, முழுக்க முழுக்க சிவ பக்தியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

வாதாபி கணபதி

வாதாபி கணபதி

வாதாபியில் இருந்து தன்னோடு கொண்டுவந்த பிள்ளையார் சிலையை திருவாரூரில் தியாகராஜர் கோயிலில், தியாகராஜர் சிலைக்கு பின்புறத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இதன் பிறகே தமிழகத்தில் பிள்ளையாரை வழிபடும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இந்த பிள்ளையார் மீது "வாதாபி கணபதி பஜேஹம்" என்ற பாடலை இயற்றினார் என்பது சிறப்பாகும்.

காஞ்சி சங்கராச்சாரியார்

காஞ்சி சங்கராச்சாரியார்

விநாயகர் வழிபாட்டைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த இறையியல் ஆய்வாளர் டேவிட் ப்ரௌன் என்பவர், தன்னுடைய "Ganesh:Studies of an Asian God" என்ற ஆய்வுப் புத்தகத்தில், திருவாரூரில் உள்ள விநாயகர் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காஞ்சிப் பெரியவரான சங்கராச்சாரியரும் இந்தக் கருத்தையே வலியுறுத்தியுள்ளார்.

 சிறுத்தொண்டர் நாயனார்

சிறுத்தொண்டர் நாயனார்

பரஞ்சோதி முழுக்க முழுக்க சிவ பக்தியில் ஈடுபட்டு சிவத்தொண்டு செய்து வந்தாலேயே, நாளடைவில் சிறுத்தொண்டர் நாயனார் என்று புகழப்பட்டார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் பேறும் பெற்றார். இவர் தான் பைரவராக தன்னுடைய இல்லத்திற்கு வந்த சிவாச்சாரியாருக்கு தான் பெற்ற மகனையே கொன்று சமைத்து படையல் இட்ட பெருமைக்கு உரியவர். இவரின் பக்தியை மெச்சிய இறைவன் இவரை சிறுத்தொண்டர் என்று அழைத்து, இறந்த மகனையும் உயிர்ப்பித்து, இவருக்கு மோட்சம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக விநாயகர் தமிழகத்திற்கு வந்து அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறார்.

சங்கடஹர சதுர்த்தி விரத நன்மைகள்

சங்கடஹர சதுர்த்தி விரத நன்மைகள்

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+