திருப்பதி போறீங்களா? ஏழுமலையானை தரிசிக்கும் முன் இவங்களை பார்க்க மறக்காதீங்க
ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல லட்சம் பேர் வருகின்றனர். பெருமாளை தரிசிக்கும் முன்பாக சில மரபுகள் உள்ளன.
சென்னை: திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது பலரது நம்பிக்கை. அதன் காரணமாகவே ஆண்டுக்கு ஒருமுறையாவது ஏழுமலையானை சென்று தரிசனம் செய்து வருவது பலரது வாடிக்கையாக உள்ளது. திருமலையில் அருள்பாலிக்கும் வெங்கடாசலபதியை தரிசனம் செய்யும் முன்பாக சிலரை தரிசனம் செய்வது மரபாக உள்ளது.
இந்தியாவில் பணக்கார கடவுள் ஏழுமலையான். தினசரி உண்டியல் வருமானம் மட்டுமே நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் வருகிறது. முடி காணிக்கை மூலமும் சில கோடிகள் வருமானம் கிடைக்கிறது. ஆண்டு வருமானம் 300 கோடிக்கு மேல் வரும் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
ஏழுமலையானை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். சில நிமிட தரிசனம்தான் என்றாலும் ஏழுமலையானை பார்த்த பரவத்தில் ஊர் திரும்பும் வரை மூழ்கி விடுகின்றனர் பக்தர்கள்.

பெருமாள் நினைக்க வேண்டும்
அந்த காலத்தில் திருப்பதிக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்றால் அது ஒரு பெரிய விஷயமாக பேசப்படும். இப்போதெல்லாம் நினைத்தால், நினைத்த உடனேயே திருப்பதிக்கு சென்று விட்டு வருகிறோம். ஆனால் பெருமாளை தரிசனம் செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. பெருமாளே நினைத்தால் மட்டும் தான், நாம் அவரை தரிசனம் செய்ய முடியும் என்பது இன்றைக்கும் நம்பிக்கையாக உள்ளது.

திருப்பதி யாத்திரை
திருப்பதிக்கு முறையாக யாத்திரை எப்படி செல்ல வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பும்போது பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பும் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் இந்த தாம்பூலத்தை பூஜை அறையில் வைத்துவிட்டு, தடங்கல் இல்லாமல் ஏழுமலையான் தரிசனத்தை பெற வேண்டுமென்று மனதார எம்பெருமானை வேண்டிக்கொண்டு வீட்டிலிருந்து யாத்திரைக்கு புறப்பட வேண்டும். ஏற்றிய தீபத்தை மறக்காமல் குளிர வைத்து விடுங்கள். குலதெய்வத்திடமும் நாம் உத்தரவு பெற்றுக்கொண்டே திருப்பதி பயணம் கிளம்ப வேண்டும்.

கோவிந்தராஜ பெருமாள்
திருமலையில் ஏழுமலையானை தரிசிக்கும் முன், முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தராஜபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை சுவாமி புஷ்கரணிக் கரையில் அருள்பாலிக்கும் வராகமூர்த்தி, அதன் பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என்பது மரபு. கோவிந்தராஜ பெருமாளை ஸ்ரீனிவாச பெருமாளின் அண்ணன் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

பத்மாவதி தாயார்
அலர்மேல்மங்கைபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பத்மாவதித் தாயாரிடம் வேண்டிக்கொண்டால் அந்த பிரார்த்தனைகளை மலைமேலிருக்கும் ஸ்ரீநிவாசப்பெருமாள் நிறைவேற்றித் தருகிறார் என்ற நம்பிக்கை திருமலைக்கு சென்ற உடன் தீர்த்தத்தில் நீராடுவது நல்லது. வெளியூரில் இருந்து திருமலைக்கு வந்து புஷ்கரணியில் புனித நீராடுவது பலவித நன்மைகளைத் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. முடியாதவர்கள் குளத்தில் இருக்கும் தீர்த்த தண்ணீரை எடுத்து உங்களுடைய தலையில் தெளித்துக்கொள்ளுங்கள்.

பன்றிக்கு நன்றி சொல்லி
வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும். அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும் என்பது விதி. வராகமூர்த்தியை வழிபட்டப் பின்னரே, மூலவரான வெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும் என்பதற்கான காரணமும் உள்ளது. வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இது ஆதி வராக க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார்.

பெருமாளிடம் கோரிக்கை
ஆழ்வார்களால் கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டுள்ள திருமலை வெங்கடாசலபதியிடம் தினசரியும் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பக்தர்களுக்கு பல மணி நேரம் அருள்பாலிக்கும் ஏழுமலையான் ஒருமணி நேரம்தான் ஓய்வெடுக்கிறார். பல வாயில்களை கடந்து பங்காரு வாகிலி எனப்படும் தங்க நுழைவு வாயில் வழியாக பெருமாளை தரிசனம் செய்வோம். அந்த இடத்தை அடைந்த உடன் எழும் உணர்வுகளை வார்த்தைகளால் கூற இயலாது. பெருமாளுக்கு நேர் எதிரே கருடன் நின்றிருப்பார் அவரை தரிசனம் செய்து விட்டு பெருமாளை பார்க்க வேண்டும். பெருமாளின் பாத தரிசனம், மார்பில் உறையும் மகாலட்சுமியை தரிசனம் செய்து விட்டு முக தரிசனம் செய்ய வேண்டும். உள்ளன்போடு மனதில் நினைப்பதை வேண்டினால் வேண்டிய வரம் தருவார் பெருமாள் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications