பூலோக வைகுண்டம்..லட்சுமியுடன் காட்சி அளித்த பெருமாள்..திருப்பதியில் சொர்க்கத்தை தரிசித்த பக்தர்கள்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து போயினர். திருமலையே பூலோக வைகுண்டமாக காட்சி அளித்தது. சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பாற்கடலில் ஆதிசேஷன் மீது அமர்ந்த பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் பார்த்து பரவசத்தில் ஆழ்ந்து போயினர்.
திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுவதைப் போல மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அன்றைய தினம் முதல் ஏழுமலையானை வழிபடும் பக்தர்கள் அனைவரும் கோவிலில் உள்ள சொர்க்கவாசலில் பிரவேசம் செய்து செல்கின்றனர். டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.
தரிசன டிக்கெட் கிடைக்காத பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். ஆனாலும் கோவிலை சுற்றி உள்ள ஆலயங்களையும் தரிசனம் செய்து செய்து விட்டு வீடு திரும்புகின்றனர். பக்தர்களுக்காக திருமலை திருக்குளத்தின் அருகே வைகுண்டம் போல செட் போடப்பட்டுள்ளது. பூக்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பாற்கடலில் ஆதிசேஷன் மேல் அமர்ந்து கொண்டுள்ள மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமி தாயாரையும் கண் முன்னே கொண்டு வந்துள்ளனர். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதுடன், புகைப்படங்கள், வீடியோ எடுத்து செல்கின்றனர்.
வைகுண்ட ஏகாதசி நாளில் ஏழுமலையான் கோவிலில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் இன்று நள்ளிரவு 12 மணி அளவில் அடைக்கப்படுகிறது. ஐந்தரை லட்சம் டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்காக வழங்கப்பட்டன. இது தவிர நாளொன்றுக்கு 20 ஆயிரம் என்று எண்ணிக்கையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளும், 2000 என்ற எண்ணிக்கையில் 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அடிப்படையில் ஆன ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கட்டுகளும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று இரவு 12 மணிக்கு நடைபெற இருக்கும் சிறப்பு பூஜைகளுடன் ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் அடைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டிற்கான ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் தரிசனம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது. மீண்டும் அடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
இதனிடையே பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு 10ஆம் தேதி தொடங்கியது. 1 மணி நேரத்திலேயே ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 22ம் தேதி வரையில் உள்ள நாட்களுக்கான அனைத்து சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் முன்பதிவு முடிவடைந்தது. சுமார் 6 லட்சத்து 67 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது. இதன் மூலம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு ஒன்றரை மணி நேரத்தில் 20 கோடியே ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல நாளை முதல் ஸ்பெஷல் பஸ்.. சென்னையில் 6 பஸ் நிறுத்தங்கள்.. முழு விபரம்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதுவரை சுமார் தினமும் 2000 டிக்கெட் வரை ஆன்லைன் மற்றும் கவுண்டர் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில் சாதாரண பக்தர்கள் வசதிக்காக மாதவம் விருந்தினர் மாளிகையில் செயல்பட்டு வந்த ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்டர் மூடப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இனிமேல் திருப்பதி விமான நிலையத்தில் மட்டுமே ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் விநியோக கவுண்டர் செயல்படும் என்றும் விமானத்தில் வரும் பக்தர்கள் தங்களுடைய போர்டிங் பாஸ் மற்றும் பி என் ஆர் நம்பர் ஆகிய விபரங்களை குறிப்பிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளை விமான நிலையத்தில் பெற்று கொள்ளலாம் என்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் போது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் பணியில் இருக்கும் தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களின் போர்டிங் பாஸ் ஆகியவை போன்ற விவரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் இனிமேல் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் வழங்கப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு 500 என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்று கூடுதலாக 250 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்றும், திருப்பதி விமான நிலையத்தில் 250 டிக்கெட்டுகள் தினமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மாதம் 12ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருப்பாவாடை கட்டண சேவை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும், டிக்கெட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் இன்று பதினொன்றாம் தேதி முதல் திருப்பதி மலையில் உள்ள கவுண்டரில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள் : சி.எம். ஆதவன்