எண்ணெய் தேய்த்து குளிப்பதில் இத்தனை சாஸ்திரம் இருக்கா? மறந்தும் சில தவறுகளை செய்யாதீர்கள்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை புதன்கிழமையிலும் சனிக்கிழமையிலும் மேற்கொள்வதுதான் நல்லது. சில காரணங்களுக்காக இது சாத்தியப்படவில்லை என்றால், விதிவிலக்காக வேறு நாட்களில் குளிக்கலாம். அதற்கு சில வழிமுறைகளை நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன.
நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது. தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை 'தின ஒழுக்கம்' என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது.
சனி நீராடு என்று நம் முன்னோர்கள் சும்மாவாகிலும் சொல்லிவிட்டுப் போகவில்லை. எந்த ஒரு செயலைச் செய்வதென்றாலும், காரண காரியங்கள் இல்லாமல் செய்யச் சொல்வதில்லை.
எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?
பஞ்சபூதங்கள், ஒன்பது கிரகங்கள், எட்டு திக்குகள் இவற்றை எல்லாம் வைத்து ஆய்வு செய்து எப்போது எதைச் செய்யவேண்டும் என்று அவர்கள் காரணத்தோடுதான் வரையறுத்து வைத்துள்ளார்கள். புதன்கிழமை அல்லது சனிக்கிழமைகளில்தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும் என நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சூரிய உதயத்திற்குப் பிறகு குளியல்
சூரியன் உதயமாகி 6 நாழிகைக்கு மேல் உள்ள நேரத்தை எண்ணெய் குளியலுக்கு உரிய நேரமாக எடுத்துக்கொள்ளலாமென நமது சாஸ்திர நூல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. காலை 6 மணி சூரிய உதயமென்றால், காலை 8.24 மணிக்கு மேல் மாலை 3.36 மணிக்கு முன்னதாக எப்போது வேண்டுமானாலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
உஷ்ணம் வெளியேறும்
சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும். மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும்.
உடலுக்கு குளிர்ச்சி
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட வேண்டும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'சந்தனாதித் தைலம்' வாங்கியும் தேய்த்துக் குளிக்கலாம். சீயக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த நலங்கு மாவைத் தேய்த்து குளித்தால் உடல் குளுமையாகும்.
கண்களுக்குக் குளிர்ச்சி
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நமது உடல், உள்ளம் மட்டும் சுத்தமாவதில்லை. நம் உடலை சமமான உஷ்ணநிலையில் வைக்கிறது. மனதில் உற்சாகம் பிறக்கச் செய்கிறது. இவை மட்டுமல்லாது நம்மைப் பிடித்த தோஷங்கள் விலகும் என்பதையும் நாம் உணர வேண்டும். இதனால் முகத்தில் ஒளிவீசும். கண் பார்வை தீட்சண்யம் அடையும். எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று வெளியில் அதிகம் அலையக் கூடாது. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
எந்த நாளில் குளிக்கலாம்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை புதன்கிழமையிலும் சனிக்கிழமையிலும் மேற்கொள்வதுதான் நல்லது. சில காரணங்களுக்காக இது சாத்தியப்படவில்லை என்றால், விதிவிலக்காக வேறு நாட்களில் குளிக்கலாம். அதற்கு சில வழிமுறைகளை நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன. எண்ணெய்க் குளியல்' நமக்கு தரும் சுகமே அலாதியானது. நமது உடலுக்கும் மனதுக்கும் இதமளிக்கக் கூடியது. ஆனால், எல்லோராலும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க முடிவதில்லை. ஒருசிலருக்குத்தான் அது சாத்தியப்படுகிறது. விடுமுறை நாள் என்பதால் பலர் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் எண்ணெய்க் குளியல் போடுகிறார்கள். அப்படிக் குளிக்கும்போதெல்லாம் பெரியவர்கள், 'ஞாயிற்றுக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வமெல்லாம் போய்விடும் என்று கூறுவார்கள்.
பரிகாரம் என்ன?
ஞாயிற்றுக்கிழமை குளிக்க வேண்டி வந்தால், செம்பருத்தி போன்ற ஏதேனும் ஒரு மலரை உடம்பில் தேய்த்தோ அல்லது தண்ணீரில் விட்டோ குளிக்கலாம். செவ்வாய்க்கிழமை என்றால் நீரில் சிறிதளவு மணல் சேர்த்து குளிக்கலாம். வியாழக்கிழமை அறுகம்புல், வெள்ளிக்கிழமை என்றால் சிறிதளவு பசுஞ்சாணம் சேர்த்துக் குளிக்கலாம். இப்படிக் குளித்தால் எந்த தோஷமுமில்லை.
இந்த தவறுகளை செய்யாதீர்கள்
குடும்ப உறவுகளுக்கும், எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும் நிறையவே தொடர்பு உண்டு. தலைவிரி கோலமாக ஒருவர் எண்ணெய் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால், அந்த சமயத்திலும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடக்கூடாது. குளிப்பதற்கு தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. நிறைய தலையில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்து இருந்தால், தலைமுடியை உடனே முடிந்து விட வேண்டும். அதை தலைவிரி கோலமாக வைத்திருக்கும் பொழுது வீட்டை விட்டு யாரும் வெளியில் பயணிக்க கூடாது.