Rifle Club OTT Review: அசத்தல் ஆக்ஷன் படம்.. ஓடிடியிலும் கிளாப்ஸ் வாங்கிய "ரைபிள் கிளப்!" விமர்சனம்
சென்னை: தியேட்டரில் வெற்றிக்கொடி நட்டு பெரும்பாலான ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு, இப்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் (OTT) வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கும் மலையாள படம் "ரைபிள் கிளப்" (Rifle Club) , பிரம்மாண்டமான பட்ஜெட்டோ, பிரபல நட்சத்திரங்களோ இல்லாமல் எப்படி ஒரு சிறிய கருவை வைத்து மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக மாற்ற முடியும் என்பதற்கு மற்றொரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
தமிழிலும் காணக் கிடைக்கும், ரைபிள் கிளப் படத்தின் விமர்சனம் (Review) இதோ: கர்நாடகாவின் மங்களூரில் ஆயுத வியாபாரம் செய்யும் அனுராக் காஷ்யப்பின் மகன், ஒரு நைட் கிளப்பில் நடக்கும் பெண்ணுக்கான, தகராறில் அந்த பெண்ணின் காதலனால் தற்காப்புக்காக கொலை செய்யப்படுகிறான். அந்த இளைஞனும் அவனது காதலியும் தப்பித்து கேரளாவின் வயநாட்டில் ஒரு துப்பாக்கி கிளப்பில் தஞ்சமடைகிறார்கள். அந்த கிளப்பின் தலைவர் விஜயராகவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் துப்பாக்கி சுடுவதில் வல்லவர்கள். இவர்களுக்கும் அனுராக் காஷ்யப்பின் கும்பலுக்கும் இடையே நடக்கும் சண்டையே படத்தின் கதை.

ரைபிள் கிளப் படத்தின் பலம்
கேட்க சாதாரணமான ஒரு கதையாக இருந்தாலும், இயக்குனர் ஆஷிக் அபு, கிளப்பில் உள்ள ஒவ்வொரு பாத்திரத்தையும் இயல்பாகவும் சுவாரசியமாகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் அசால்ட் காட்டும் கிளப் உறுப்பினர்களின் உடல்மொழி பார்ப்பவர்களுக்கும் ஒரு உற்சாகத்தை கொண்டுவந்துவிடுகிறது. "துப்பாக்கியோடு நாங்க உள்ளே போகும்போதும் கூலா சிரிச்சிகிட்டே இருந்தாங்க, இப்போ அவுங்க முழுசா சண்டைக்கு ரெடியாகிட்டாங்க, அப்போ எப்படி இருப்பாங்க" என்று வில்லன் கேங்கைச் சேர்ந்தவர் அனுராக் காஷ்யப்பிடம் பயந்தபடியே சொல்லும் அந்த ஒரு வார்த்தைதான் மொத்த படத்தின் தீம்.
வசனங்களின் கூர்மை
"ஒரு நல்ல துப்பாக்கிக்கு முதலாளி என்று யாரும் கிடையாது, "காலுக்கு அடியில் நிலமே நடுங்கினாலும் சரி துப்பாக்கியை பிடித்த கை நடுங்க கூடாது" "நாம துப்பாக்கி சுடுறதில் வல்லவர்கள்னா எல்லா ரவுடிகளையும் சுட்ட பிறகும் நம்மகிட்ட 3 குண்டு மிச்சமிருக்கனும்" போன்ற டயலாக்குகளாகட்டும், கதாப்பாத்திரங்கள் துப்பாக்கியை தங்கள் கைகளில் பிடித்து கொள்ளும் முறையாகட்டும், துப்பாக்கி சுடும் விஷயத்தில் இயக்குநர் எந்த அளவுக்கு ஸ்டடி செய்துவிட்டு படம் எடுத்திருப்பார் என்பதை புரிய வைக்கும். "எல்லாருக்கும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் யாரும் வேட்டையாட விரும்புவதில்லை" என்ற கிளப் வாசல் வாசகம் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு செய்தியை கடத்துகிறது.

ஒளிப்பதிவு மற்றும் இசை
ஆஷிக் அபுவின் ஒளிப்பதிவு பவுர்ணமி நாளின் அந்த இரவை அருமையாக காட்டியுள்ளது. நாம் காட்டுக்குள் வேட்டையாட சென்றால் எப்படியான அனுபவம் கிடைக்குமோ அதை ஒளிப்பதிவு கொடுத்துவிடுகிறது. துப்பாக்கி குண்டுகளின் வேகத்திற்கு ஈடாக கேமரா நான்-ஸ்டாப்பாக ஓடியுள்ளது. போதாத குறைக்கு பைக்குகளில் சீறிப் பாயும் வில்லன்களையும் அதே டென்ஷனோடு காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். ரெக்ஸ் விஜயனின் இசை படத்தின் வேகத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. புலி உள்ளிட்ட காட்டு விலங்குகள் வரும் காட்சி கிராபிக்ஸ் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை என்றாலும் கேமரா வேலை அந்த குறையையும் முடிந்த அளவுக்கு மறைக்க பார்த்து ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளது.
படத்தின் குறைகள்
லாஜிக் இல்லை என்பதுதான் முதல் மற்றும் பெரிய குறை. இவ்வளவு பெரிய சண்டை தொடர்ந்து நடக்கிறது, ஆனால் போலீஸ் என்ற ஒரு துறையே படத்தில் இல்லை. 1990களில் படம் நடப்பதை போல காட்டியதால் செல்போனில் யாருக்கும் தகவல் சொல்ல முடியாது சரிதான், அதற்காக அப்போதெல்லாம் காவல்துறைக்கு கட்டாய விடுமுறை அளித்துவிட்டார்களா என்ன? கிளப்பிலிருந்து குழந்தைகளை கூட்டிக் கொண்டு போனாரே அவர் கூட போலீசுக்கு எந்த தகவலும் சொல்லவில்லை. சிவகாசி பட்டாசு போல வெடிக்கும் சத்தம் ஊரில் ஒருவருக்கும் கேட்கவும் இல்லை. இந்த லாஜிக்கை மறந்துவிட்டு திலீஷ் போத்தன், அனுராப் காஷ்யப் நடத்தும் மேஜிக்கை பார்க்க விரும்புவோருக்கு இது நல்ல படம்தான். ஒரு கட்டத்தில் இது கன்னடர்-மலையாளி மோதலா என நினைக்க வைக்கும் அளவுக்கு காட்சியமைப்புகள் போவதையும் இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
படம் எப்படி?
மைல்டான காமெடி, ஒரே இடத்தில் பெரும்பாலான கதை, ஆக்ஷன் நடந்தாலும் சலிக்காத காட்சியமைப்பு, கைதி திரைப்படம் மாதிரி எதிராளிகளிடமிருந்து தப்பிக்க தொடர் அட்டாக்குகளை எதிர்கொள்ளும் நல்லவர்களின் போராட்டம், கிளைமேக்ஸ் கூஸ்பம்ப் ஆகிய அனுபவத்தை பெற வேண்டுமெனில் தாராளமாக இப்படத்தை பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications