ஹோட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சிய நடிகைகள்.. ஹேமா கமிஷன் அறிக்கையில் திடுக் தகவல்
திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்து ஆய்வு செய்யவே அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையை இன்று கேரள அரசு வெளியிட்டது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 15 ஆண் பிரபலங்களின் பிடியில்தான், மொத்த மலையாள சினிமாவும் அடங்கியிருக்கிறது என்றும், பல நடிகைகள் ஹோட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு, மலையாள சினிமா துறையில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகம் நடப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து, கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க வேண்டும் என்று நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்து ஆய்வு செய்யவே இந்த ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது..
இந்தக் குழு கடந்த 2019 ஆம் ஆண்டே அறிக்கையை சமர்பித்துவிட்டது. ஆனாலும் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்புகளும் தெரிவித்தனர். நான்கரை வருட காலமாக வெளியிடப்படாமல் இருந்த ஹேமா கமிட்டி அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. 233 பக்கங்களைக் கொண்ட நீதிபதி கே.ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடு, ஆன்லைன் துன்புறுத்தல், பாலியல் சித்திரவதை என மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை இன்றைய ஹேமா கமிட்டி முன்னிலைப்படுத்தியுள்ளது. ஹேமா குழு அளித்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத் துறையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட மொத்தம் 15 ஆண் பிரபலங்களின் பிடியில்தான், மொத்த மலையாள சினிமாவும் அடங்கியிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட தொழில்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பற்றிய துன்புறுத்தல் விவரங்களுடன் அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.
யாரெல்லாம் பாலியல் டார்ச்சருக்கு உள்ளாகிறார்களோ, அவர்கள் உயிருக்கு பயந்து போலீசுக்கும் செல்லாமல் தயங்குகிறார்களாம். அதுபோக போலீசில் புகார் அளிக்க சென்றால் அந்த நடிகைகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி மிரட்டுவது.. போன்ற நடவடிக்கைகளிலும் நடிகர்கள் ஈடுபடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பல நடிகைகள் ஹோட்டல் அறைகளில் தனியாக தங்க அஞ்சுவதாகவும் தங்களின் பாதுகாப்பிற்காக குடும்பத்தினருடனே தங்கியிருக்க விரும்புவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி விசாரணையின் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி மலையாள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications