கேரளா சிபிஎம் மாநிலச் செயலாளராக எம்வி கோவிந்தன்.. அமைச்சரவையில் மாற்றமா? நாளை முக்கிய ஆலோசனை
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பதவியை கொடியேரி பாலகிருஷ்ணன் ராஜினாமா செய்த நிலையில், புதிய மாநிலச் செயலாளராக எம்வி கோவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் 2006 முதல் 2011 வரை முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான சிபிஎம் ஆட்சியில் உள்துறை அமைச்சாக பணியாற்றியவர் கொடியேரி பாலகிருஷ்ணன். அதனைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக 2018ம் ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அவரது மகன் பினீஷ் கொடியேரி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். அப்போது கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார். கிட்டத்தட்ட ஓராண்டு சிறையில் இருந்து பினீஷ் கொடியேரி ஜாமீனில் வெளிவந்த பின்னர், மீண்டும் கேரள மாநில செயலாளராக கொடியேரி பாலகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.

3ம் முறையாக தேர்வு
2018ம் ஆண்டுக்கான பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், கடந்த மார்ச் மாதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக கொடியேரி பாலகிருஷ்ணன் கேரள மாநிலச் செயலாளராக பதவியேற்றார். ஆனால் புற்றுநோய் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் பாலகிருஷ்ணன், பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிபிஎம் முக்கிய நிர்வாகிகளான சீத்தாராம் யெச்சூரி, பினராயி விஜயன், பிருந்தா காரத், எம்ஏ பேபி ஆகியோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

முக்கிய முடிவு
பின்னர் இன்று காலை சிபிஎம் முக்கிய நிர்வாகிகளான த்தாராம் யெச்சூரி, பினராயி விஜயன், பிருந்தா காரத் ஆகியோர் கொடியேரி பாலகிருஷ்ணனை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றனர். இந்த சந்திப்புக்கு பின் அடுத்த மாநிலச் செயலாளராக யாரை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

எம்வி கோவிந்தன் நியமனம்
இந்த நிலையில் கேரள மாநிலத்தின் கலால் துறை அமைச்சராக உள்ள எம்வி கோவிந்தன் புதிய மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கேரள அமைச்சரை மாற்றியமைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து முக்கிய முடிவு, நாளை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம்?
ஏற்கனவே கேரள அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் பதவி விலகியுள்ளார். அதேபோல் என்வி கோவிந்தன் கேரள மாநில சிபிஎம் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரும் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications