கேரளாவில் வெளுக்கும் அடைமழை.. மூணாறு செல்பவர்கள் கவனத்திற்கு.. அலர்ட் செய்யும் தமிழ்நாடு வெதர்மேன்!
திருவனந்தபுரம்: அடுத்த சில நாட்களுக்கு மூணாறு-க்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய மற்றும் வடக்கு கேரளா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பெய்து வரும் மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக திருச்சூர், இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

22 பேர் பலி
இதுவரை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 22 பேர் பலியாகினர். 250க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழையால் வீடுகளை இழந்தவர்களுக்காக மாநிலம் முழுவதும் 221 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 7 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அதிக மழை
இதனிடையே இடுக்கி மற்றும் மூணாறு பகுதிகளில் இடைவிடாமல் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில், கேரளாவில் காக்கயம் பகுதியில் அதிகபட்சமாக 297 மிமீ கனமழை பதிவுவாகியுள்ளது. அதேபோல் சிறுவாணி பகுதியில் 190 மிமீ, பம்பை மற்றும் காக்கி அணை பகுதிகளில் 165 மிமீ மற்றும் 164 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், இடுக்கி மற்றும் மூணாறு பகுதிகளில் இடைவிடாது தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு மூணாறு-க்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

விடுமுறை
இதனால் அடுத்த சில நாட்களுக்கு மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் சிறிது நாட்களுக்கு பின் திட்டமிடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இடுக்கி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications