கிறிஸ்தவ பாட்டியின் சடலத்தை.. மதார்ஸாவில் வைத்து.. குளிப்பாட்டிய முஸ்லீம்கள்.. உருக்கும் "மத"இணக்கம்
கிறிஸ்தவ பாட்டியை குளிப்பாட்டினார்கள் முஸ்லிம் பெண்கள்
திருவனந்தபுரம்: ஒரு கிறிஸ்தவ பாட்டி இறந்து போய்விடவும், அவரது சடலத்தை அரபி பாடசாலையில் வைத்து, முஸ்லிம்பெண்கள் குளிப்பாட்டி கல்லறைக்கு எடுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் உருக்கத்தை தந்து வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பாட்டி பிரிட்ஜட் ரிச்சர்ட்.. 84 வயசாகிறது.. ரிச்சர்ட் என்பது இவரது கணவரின் பெயர்.. பிரிட்ஜட் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.
பிறகு ரிடையர்ட் ஆகிவிட்டு, மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி அருகே உள்ள பொன்னாட்டு பகுதியில் ஒரு வீட்டை கட்டி வசித்து வந்தார்... கடந்த 13 வருஷமாக கணவருடன் இந்த வீட்டில்தான் பிரிட்ஜட் வாழ்ந்து வந்தார்... ஆனால் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை..
சில வருஷத்துக்கு முன்பு ரிச்சர்ட் இறந்துவிட்டார்.. அதனால் அந்த வீட்டில் பிரிட்ஜட் மட்டும் தனியாகவே வசித்து வந்தார்.. கொஞ்ச நாளாகவே பிரிட்ஜட்-டுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது.. அதனால், கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.. ஆனால், டாக்டர்கள் போராடியும் பிரட்ஜட்டை காப்பாற்ற முடியவில்லை.. இறந்துவிட்டார்.
இதையடுதது, அவரது உடலை ஃபிரீசரில் வைத்து வீட்டுக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது... அதன்படியே ஃபிரீசரில் சடலம் வைக்கப்பட்டது.. ஆனால் வீட்டுக்குள் அந்த ஃபிரீசரை கொண்டு செல்ல முடியாமல் அந்த ஏரியாவே வழியில்லாமல் குறுகலாக இருந்தது.. அதனால், சடலத்தை மறுபடியும் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்ல முடியாமல், நடுவழியில் தவித்தபோது, அதை பார்த்துவிட்டு சில முஸ்லிம்கள் அங்கு வந்தனர்.. அங்குள்ள அரபி பாடசாலையில் உடலை வைத்து கொண்டு போகுமாறு சொன்னார்கள்..
அந்த அரபி பாடசாலையில் இப்போதைக்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் ஒரு கிளாஸ் ரூமில், பிரிட்ஜட்டின் உடல் வைக்கப்பட்டது... ஏற்கனவே அந்த ரூமில் மதார்சா பிள்ளைகள் படித்து கொண்டிருந்ததால், அந்த ரூமுக்கு மட்டும் லீவு விடப்பட்டது.. பிறகு, மேலும் சில முஸ்லிம் பெண்கள் திரண்டு மதார்சாவுக்கு வந்து பிரிட்ஜட்டின் உடலை குளிப்பாட்டினர்.. அவரை இறுதி யாத்திரைக்கும் தயார் செய்தனர்.
பட்ஜெட் எதிர்பார்ப்பு... ஜனவரி ஜிஎஸ்டி வசூலில் சாதனை
கடைசியில், அதே கிளாஸ் ரூமில் கிறிஸ்தவ முறைப்படி, ஜெபமும், இறுதி பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோழிக்கோடு வெஸ்ட்கில் பகுதியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்துக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.. இந்த இறுதி சடங்கில், அதாவது கல்லறைக்கு, எம்எல்ஏ இப்ராஹிம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
மதார்சாவில் ஜெபம் செய்யப்பட்ட அந்த தருணமும், முஸ்லீம்களின் இந்த சகோதரத்துவமும் அப்படியே புல்லரிக்க வைத்துவிட்டது.. இப்படி ஒரு சகிப்புத்தன்மையும், கருணையும், அளவுகடந்த அன்பும் இருக்கும்போது, யார், எத்தனை பிரிவினைகள் செய்ய நினைத்தாலும்சரி, நம்மை ஒன்னுமே அசைக்க முடியாது..!