இதுதான் யாத்திரையா? கேரளாவில் 18 நாள்! உபியில் மட்டும் வெறும் 2 நாள்! ராகுல் காந்தியை விளாசிய சிபிம்
திருவனந்தபுரம்: ராகுல் காந்தி தேச ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்று நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த நடைப்பயணம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ள கேரளாவில் இந்த யாத்திரை 18 நாட்கள் நடைபெறும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இந்த யாத்திரை வெறும் 2 நாட்கள்தான் நடைபெறுகிறது.
இதனை குறிப்பிட்டு சிபிஎம் கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் பதில் விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் தோல்வி
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் கடும் தோல்வி, 2014 மற்றும் 2022க்கு இடையில் நடந்த 49 சட்டமன்றத் தேர்தல்களில் 39ல் கட்சி தோல்வியடைந்தது ஆகியவை காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியலின் மிக மூத்த தலைவர்களை தங்களகத்தே கொண்டிருப்பது மட்டுமே கட்சியின் பெரும் பலமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கட்சியின் இந்த மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பயணம்
இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் கட்சியை பலப்படுத்தவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம், 150 நாட்கள் வரை தொடர்கிறது. 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கிமீ பயணித்து காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்கிறார் ராகுல் காந்தி.

பயணத்தின் நோக்கம்
இந்நிலையில் தமிழ்நாட்டில் பயணத்தை முடித்துக்கொண்டு கேரளாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் ராகுல். ஆனால், இவரின் இந்த பயண திட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் தெரிவித்துள்ளது. அதாவது, காங்கிரஸ் கட்சி கேரளாவில் எதிர்க்கட்சியாக இருக்கிறது. இங்கு சிபிஎம் ஆளும் கட்சியாக உள்ளது. ஆனால் தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் வரிசையில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கைகோர்த்துதான் செல்கிறது.

விமர்சனம்
இப்படி இருக்கையில் தனக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடைப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் காங்கிரசுக்கு ஏற்கெனவே நல்ல வலுவான தளம் உள்ள கேரளாவில் 18 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்கிறார். இதிலிருந்து காங்கிரஸ் யாருக்கு எதிராக செயல்படுகிறது என்று கேள்வியெழுப்பும் வகையில் இந்த பயணதிட்டத்தை ராகுல் காந்தி படத்துடன் இணைந்து கேலிச்சித்திரமாக வெளியிட்டுள்ளது சிபிஎம்.

பாஜகவின் பி-டீம்
மேலும் இது இந்தியாவை ஒன்றிக்கும் பயணமா? அல்லது எம்பி சீட்டுக்கான பயணமாக என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. இந்த விமர்சனம் குறித்து காங்கிரஸ் தரப்பிலும் பதில் விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "சிபிஎம் பாஜகவின் பி-டீம்" என்று விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி வயநாடு தொகுதியின் எம்பியாக உள்ளார் என்பதும் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications