இது ஒருதலைபட்சம்.. ஆணை, பெண் பலாத்காரம் செய்தால் வழக்கு தொடர சட்டம் இல்லை.. கேரள ஹைகோர்ட் ஆதங்கம்
திருவனந்தபுரம்: பலாத்கார தண்டனை வழங்கப்படும் இந்திய தண்டனை சட்டம் 376 பாலினம் அடிப்படையில் நடுநிலையாக இல்லை. திருமண வாக்குறுதி அளித்து ஆண் ஒருவரை பெண் ஏமாற்றினால் அவர் மீது வழக்கு தொடர முடியாது. ஆனால் அதே குற்றத்துக்காக ஆண் மீது வழக்கு தொடரலாம். இதனால் இந்த சட்டம் நடுநிலையுடன் இருக்க வேண்டும்'' என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பதி கருத்துவேறுபாட்டால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது.
தற்போது அந்த தம்பதி பிரிந்து உள்ள நிலையில் குழந்தையை யார் வளர்ப்பது என்பது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணை
இந்த வழக்கை நீதிபதி முகமது முஸ்தாக் விசாரணை நடத்தினார். இந்த வேளையில், விவாகரத்து பெற்ற கணவரின் தரப்பில் ஆஜரான வக்கீல், ‛‛எனது கட்சிக்காரர் மீது கற்பழிப்பு வழக்கு சுமத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக அவர் மீது ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது'' என வாதிட்டார்.

நீதிபதி கருத்து
இந்த வேளையில் நீதிபதி முகமது முஸ்தாக் குறுக்கீட்டார். அப்போது இந்திய தண்டனை சட்டத்தின் 376வது பிரிவு(பலாத்காரம்) பாலினம் அடிப்படையில் நடுநிலையாக இல்லை எனக்கூறி வருத்தம் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அவர் சில கருத்துகளை கூறி இந்த பிரிவில் பெண்கள் மீது வழக்கு தொடர முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.

சொன்னது என்ன?
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்திய தண்டனை சட்டம் 376 (பலாத்காரம்) பாலினம் ரீதியாக நடுநிலையாக இல்லை. திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் ஒருவர் ஆணை ஏமாற்றினால் அவர் மீது வழக்கு தொடர முடியாது. ஆனால் அதே குற்றத்துக்காக ஆண்கள் மீது வழக்கு தொடரலாம். இது என்ன மாதிரியான சட்டம்?. இந்த சட்டம் பாலினம் வாரியாக நடுநிலையுடன் இருக்க வேண்டும்'' என தெரிவித்தார்.

முந்தைய வழக்கிலும் கருத்து
முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் நீதிபதி முகமது முஸ்தாக் மற்றொரு வழக்கிலும் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து இருந்தார். அப்போது, இந்திய தண்டனை சட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விதிகள் பாலின நடுநிலையுடன் இல்லை. திருமணம் செய்தல் தொடர்பான வாக்குறுதியின் அடிப்படையில் ஆண்-பெண் உறவு வைத்து கொள்வதும், அதன்பிறகு திருமணம் நடக்காவிட்டால் அதற்கு பலாத்காரம் என தண்டனை வழங்க முடியாது. அதேநேரத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தவறான வாக்குறுதி கொடுத்து உறவு வைத்து கொண்டால் பலாத்காரமாக கருதி தண்டனை வழங்கப்படும் என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications