எதிர்க்கட்சியே இல்லாத ஐக்கரநாடு பஞ்சாயத்து.. 14 இடங்களையும் தட்டித் தூக்கிய அரசியல் சாரா அமைப்பு
திருவனந்தபுரம்: எர்ணாகுளம் மாவட்டத்தில் ஐக்கரநாடு கிராம பஞ்சாயத்தில் வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சிகளே இல்லாத அளவிற்கு அரசியல் கட்சியை சாராத ஒரு அமைப்பு மொத்த இடங்களையும் கைப்பற்றியது.
கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களிலும், 10-ந் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 14-ந் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணனூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

ஆச்சரியம்
இதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் ஒரு பஞ்சாயத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத அளவுக்கு மொத்த இடங்களையும் ஒரு அமைப்பு பிடித்துள்ளது. இது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை தந்துள்ளது.

14 இடங்களிலும் அபாரம்
எர்ணாகுளம் மாவட்டத்தில் 7 தாலுக்காக்களும், 15 பஞ்சாயத்துகளும் 84 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. இதில் ஒன்று ஐக்கரநாடு கிராம பஞ்சாயத்து ஆகும். இங்கு 20-20 என்ற அரசியல் சாராத ஒரு அமைப்பு போட்டியிட்டது. இந்த அமைப்பு அந்த பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 14 இடங்களிலும் வெற்றி பெற்றது.

பஞ்சாயத்து
இதனால் எதிர்க்கட்சியே இல்லாத பஞ்சாயத்து என்ற பெயரை பெற்றது ஐக்கரநாடு. இது பஞ்சாயத்து வரலாற்றில் முதல்முறையாகும். இந்த 20- 20 அமைப்பானது கிட்டெக்ஸ் குரூப் என்ற துணி உற்பத்தி நிறுவனத்தின் ஆதரவுடன் களமிறங்கியது.

கார்ப்பரேட் நிறுவனம்
கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் துணையுடன் இந்த அமைப்பு முதல் முறையாக போட்டியிட்டது. அதில் கிழக்கம்பலம் என்ற ஒரு பஞ்சாயத்தில் வெற்றியும் பெற்றது. கார்ப்பரேட்டுடன் கைகோர்த்துக் கொண்டு பஞ்சாயத்தை ஆட்சி செய்வதாக அந்த அமைப்பின் மீது விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications