ஆலப்புழா ஏரிக்கு நடுவில்.. செட் போட்டு பிரம்மாண்ட திருமணம்.. வைரலான கேரள தம்பதி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு நடுவில் பிரம்மாண்ட செட் போட்டு திருமணம் நடத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படகுப் போட்டியில் பெண்கள் அணியின் கேப்டன் என்ற முறையில் தனது திருமணத்தையே ஏரிக்கு நடுவில் நடத்தியுள்ளார் அந்த மணப்பெண்.
கடவுளின் தேசம் கேரள மாநிலத்திற்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அதன் மலைவாசத் தலங்களும், நீர்நிலைகளும், பசுமையும்தான் அதற்கு முக்கிய காரணம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்றும், இயற்கை கொஞ்சும் அழகுடனும் காணப்படும் மாவட்டமாகும். அது மட்டுமல்லமால் பராம்பரியப் பண்டிகைகள் மற்றும் கலாசாரத்துக்கும் பெயர்பெற்றது கேரள மாநிலம்.

கேரள மாநில அரசுக்கு மலைவாசத் தலங்களும், நீர்நிலைகளும்தான் அதிக வருவாய் தருகின்றன. அதிலும், குறிப்பாக ஏரிகளில் படகு சவாரிகள் செய்வதை சுற்றுலாப் பயணிகள் மிகவும் விரும்புகின்றனர். ஹவுஸ் போட் எனப்படும் மேற்கூரையுடன் கூடிய குடும்பப் படகு பயணம் இதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மட்டும் சுமார் 500 க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளின் படகு சவாரி தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
இந்நிலையில், ஆலப்புழா கைநகரி ஏரியில் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட திருமணம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்களை சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் தனது பேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளார்.

கேரள மாநிலம், சாலக்குடியைச் சேர்ந்தவர் ஹரிநாத். டெல்லி காவல் துறையில் தடவியல் நிபுணராக பணியாற்றி வருபவர் ஹரிதா (25). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. மணப்பெண் ஹரிதா படகுப் போட்டியில் ஆர்வம் கொண்டவர். ஆலப்புழா மாவட்டம், புன்னமடை காயலில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் படகுப் போட்டியில் பெண்கள் அணியின் கேப்டனாகவும் உள்ளார்.
இந்நிலையில், தனது திருமணத்தை ஏரிக்கு நடுவில் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஹரிதா. பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்கவே தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கின. மண்டபம் செட் போடுவதற்கான முன் அனுமதியை ஆட்சியரிடம் பெற்றுள்ளனர். திருமணத்துக்காக ஆலப்புழா ஏரிக்கு நடுவில் பிரம்மாண்ட மண்டபம் அமைக்கப்பட்டது.

திருமணம் நடத்துவதற்கான மண்டபம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் கல்யாண விருந்துகளுக்கு என சிறிய மண்டபம் போன்ற செட் ஏரியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. கேரள பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட படகில் புதுமணத் தம்பதி அழைத்து வரப்பட்டனர். பின்னர், இருவரும் மண்டபத்திற்கு வந்து மாலை மாற்றிக் கொண்டனர்.
பெற்றோர், உறவினர் ஆசியுடன் மகிழ்ச்சி பொங்க திருமணம் செய்துகொண்டனர். ஏரியின் நடுவில் நடந்த இவர்களின் திருமணத்திற்கு மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமல்லாமல் வெளிமாவட்ட, மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். படகுப் போட்டியின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக ஏரிக்கு நடுவில் நடத்தப்பட்ட இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த அழகிய திருமணம் குறித்த புகைப்படங்களை சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் தனது பேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளார். நெட்டிசன்கள் பலரும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications