ரஷ்ய-உக்ரைன் போரில் இந்திய இளைஞர்கள்.. உடனடியாக மீட்க கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்!
திருவனந்தபுரம்: ரஷ்யாவின் ராணுவத்தில் சிக்கி, உக்ரைன் போர்முனையில் கட்டாயமாக ராணுவ பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வலியுறுத்தியுள்ளார்.
உக்ரனைக்கு எதிராக ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக போரை தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இந்த போரில் இந்தியர்கள் சிலர் பங்கெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு போர் களத்தில் இறக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் போர்க்களத்தில் சிக்கித் தவித்த 7 இளைஞர்கள் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளனர். இந்த 7 பேரில் 5 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலாவுக்காக சென்றிருக்கின்றனர். ஆனால், பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
இப்படி ஏமாற்றி ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் உக்ரைன் எல்லையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, 23 வயதான ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா, குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை சேர்ந்தவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் சென்னையிலிருந்து ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அங்கு, ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்கள் தேவை என்கிற விளம்பரத்தை பார்த்து, ஏஜென்சிகள் மூலம் ராணுவத்தில் சேர்ந்திருந்திருக்கிறார். அவருக்கு மாதம் ரூ.2.3 லட்சம் சம்பளம் கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக அவருக்கு ரஷ்ய ராணுவம் சார்பில் துப்பாக்கி சுடுதல், வெடி பொருட்களை கையாளுதல் உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போர்க்களத்தில் கடந்த 21ம் தேதி அவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து ரஷ்ய போர்க்களத்தில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இது குறித்து ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், கேரள மாநிலத்தை சேர்ந்த டினு, பிரின்ஸ் மற்றும் வினீத் என 3 பேர் ரஷ்ய ராணுவத்தில் சிக்கியிருப்பதாகவும், இதேபோல் போர் களத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இவர்கள் மூவரும் செக்யூரிட்டி வேலைக்காக ரஷ்யாவுக்கு சென்றிருக்கின்றனர். வேலைக்காக ரூ.7 லட்சத்தை முகவரிடம் கொடுத்திருக்கின்றனர். ஆனால், இந்த பணத்தை பெற்றுக்கொண்ட போலி முகவர் இந்த இளைஞர்களை ரஷ்ய ராணுவத்தில் சேர்த்திருக்கிறார். சேர்க்கப்பட்ட மூவருக்கும் 15 நாட்கள் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அவர்கள் போர் முனையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications