தடுப்பூசி போட மறுக்கும் அரசு ஊழியர்கள்.. அப்போ பில் நீங்களே கட்டுங்க.. செக் வைத்த பினராயி!
திருவனந்தபுரம்: கொரோனா பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், வேக்சின் செலுத்தாதவர்களுக்கு செக் வைக்கும் வகையில் புதிய உத்தரவைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறப்பித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
கடந்த காலங்களில் உருமாறிய கொரோனா வகைகளே அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பல்வேறு நாடுகளும் ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கிவிட்டன.

மத்திய அரசு
இந்தியாவும் ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிட்டுள்ள 8 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தச் சூழலில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் அனைத்து மாநில அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் வைரஸ் சோதனைகளை அதிகப்படுத்தவும் வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா சோதனைகள்
புதிய ஓமிக்ரான் கொரோனாவை RT PCR மற்றும் RAT சோதனைகளில் கண்டறியலாம் என்பதால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வருவோரையும் அவர்கள் தொடர்பில் இருப்போரையும் தீவிரமாகக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலவச சிகிச்சை இல்லை
இந்நிலையில், கொரோனா வேக்சின் போட மறுப்பவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். அதேநேரம் மருத்துவ காரணங்களால் வேக்சின் போட்டுக்கொள்ள முடியாதவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்கள்
மேலும், இது தொடர்பாக பினராயி விஜயன் தனது ட்விட்டரில், "ஒவ்வாமை அல்லது உடல்நலக் குறைபாடு காரணமாகத் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்கள் அரசு மருத்துவரின் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற வேக்சின் போடாத பள்ளி ஊழியர்கள் ஏழு நாட்களுக்கு ஒருமுறை RT-PCR நெகடிவ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். தடுப்பூசி போட மறுப்பவர்கள் தங்கள் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளுக்கான பணத்தை தாங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்,

என்ன காரணம்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் கொரோனாவை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், கேரள முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சிறப்பு முகாம்
மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் பயண வரலாறு முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் இதுவரை வேக்சின் போட்டுக் கொள்ளாதவர்கள் பயன் பெறும் வகையில் வரும் டிசம்பர் 1 முதல் 15 வரையிலான தேதிகளில் சிறப்பு வேக்சின் முகாம்களை நடத்தவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. புதிய உருமாறிய கொரோனா அச்சம் காரணமாக புதிய தளர்வுகள் அறிவிக்கப்படாது என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications