ரயிலில் கேரளாவுக்கு போறீங்களா.. அப்போ அந்த சர்டிபிகேட் கட்டாயம்.. பினராயி விஜயன் உத்தரவு!
திருவனந்தபுரம்: வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கேரளா செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிதது வருகிறது.
ஒரு பக்கம் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் அல்லாடி வருகின்றனர். இது தவிர ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
கேரளாவில் தேவை அதிகரிப்பு.. தமிழ்நாட்டுக்கு ஆக்சிஜன் அனுப்ப முடியாது.. பிரதமருக்கு பினராயி கடிதம்
கேரளாவில் அதிகரிக்கும் பாதிப்பு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இது வரை இல்லாத அளவுக்கு தினமும் உச்சபட்ச பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 43,529 பதிய பாதிப்புகள் பதிவாகி உச்சம் தொட்டது. கொரோனா காரணமாக 95 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் கொரோனா நேர்மறை விகிதம் 29.75% ஆக உயர்ந்து விட்டது.
முழு ஊரடங்கு
கொரோனாவை ஒழிக்க கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சாலை வழியாக செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இ-பாஸ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால்தான் கேரளா உள்ளே அனுமதிக்கப்டுகின்றனர்.
சாலை வழி செல்பவர்களுக்கு கட்டுப்பாடுகள்
இதேபோல் கர்நாடகாவில் இருந்து சாலை வழியாக கேரளா செல்பவர்களும் இ-பாஸ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சாலை வழியில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்க ரயிலில் கேரளாவுக்கு செல்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ரயில் மூலம் செல்பவர்களுக்கு இ-பாஸ் கூட சரியான முறையில் கேட்கப்படாததால் வெளிமாநிலங்களில் இருந்து பலர் சர்வசாதாரணமாக கேராளாவுக்கு சென்று வந்தனர்.
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
எனவே ரயில் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் வெளிமாநிலங்களில் ரயில் மூலம் கேரள செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ' கேரளாவுக்கு ரயில் மூலம்வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வருகை புரிகின்றனர். அப்படி வருபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் என்ற ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.