5 ஆண்டுகளில் 12 பெண்கள் மாயம்..அதிர வைக்கும் கேரளா..நரபலியா? விசாரிக்கும் போலீஸ்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. நரபலி குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும் கேரளா மாநில காவல்துறை நியமித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் பத்மா, ரோஸ்லின் என்ற இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை உருவாகியுள்ளது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற பேரசையில் ஏழை பெண்களை மயக்கி அழைத்து வந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி நரமாமிசம் சமைத்து சாப்பிட்டுள்ளனர். கொடூர சம்பவம் குறித்து கேட்கும் போதே பலரது ரத்தத்தை உறைய வைக்கிறது.
ஆட்டுக்கறிபோல் கூறுபோட்ட அரக்கர்கள்.. மனித உறுப்புகளை புதைத்து மஞ்சள் செடி நடவு! கேரள நரபலி பயங்கரம்
பணத்திற்காக நரபலி
பெண்கள் இருவரும் பணத்திற்காக நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ரோஸ்லின் ஜூன் மாதம் கொல்லப்பட்டுள்ளார். பத்மா செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல பெண்கள் மாயம்
எங்களிடம் தற்போது இவ்வளவு தடயங்கள்தான் கிடைத்துள்ளன. தரகர் முகமது ஷபி மற்றும் தம்பதிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். தருமபுரி பத்மா உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட எலந்தூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 3 பெண்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு புலனாய்வுக்குழு
போலி மந்திரவாதி ஷபியால் இந்த இரண்டு பெண்கள் மட்டும்தான் கொல்லப்பட்டனரா? அல்லது இது போல பலரை கொன்று கூறு போட்டு புதைத்துள்ளானா என்பதை அறிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ( SIT) கேரள காவல்துறைத் தலைவர் அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க கொச்சி துணை போலீஸ் கமிஷனர் சசிதரன் எஸ்ஐடி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரும்பாவூர் ஏஎஸ்பி அனுஜ் பாலிவால் தலைமை விசாரணை அதிகாரியாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 பெண்கள் மாயம்
இதனிடையே 5 ஆண்டுகளில் கொச்சி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போன நிலையில் ஒரு பெண்ணின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய 12 பெண்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாததால் அவர்கள் காணாமல் போன வழக்கை கேரள போலீஸ் மீண்டும் விசாரிக்கிறது.
உயர்நீதிமன்றம் அதிர்ச்சி
இதனிடையே, இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிப்பது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறது. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது நரபலி குறித்த தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
மனித பகுத்தறிவை மீறிய செயல்
இதுகுறித்து பேசிய நீதிபதி ராமசந்திரன், "அரசின் கவனக்குறைவையும், மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கவனித்து வருகிறது. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது மனித பகுத்தறிவை மீறிய செயல். இந்தச் செயல்களால் கேரளா எதை நோக்கிச் செல்கிறது என்ற ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.