ஷாக்..! கேரளாவை அச்சுறுத்தும் நிபா.. 11 பேருக்கு வைரஸ் அறிகுறிகள்.. அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்
திருவனந்தபுரம்: நிபா வைரசால் உயிரிழந்த 12 வயது சிறுவனுடன் தொடர்பிலிருந்த 11 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதாகக் கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கேரளா மாநிலத்தில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைகளுக்குப் பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அது ஒரு புறம் பிரச்சினை என்றால், இப்போது அங்கு நிபா வைரசஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளான். இதையடுத்து தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் குழு கேரளா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டது.

11 பேருக்கு அறிகுறிகள்
இந்நிலையில், இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "நிபா வைரசால் உயிரிழந்த 12 வயது சிறுவனுடன் தொடர்பிலிருந்த 11 பேருக்கு நிபா அறிகுறிகள் இருக்கிறது. ஆனால் அவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளது. அவர்களில் 8 பேரது சோதனை முடிவுகள் இன்று இரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல மற்ற 3 பேரது மாதிரிகள் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

251 பேர்
அச்சிறுவனுடன் தொடர்பிலிருந்த 251 பேர் கண்டறிந்துள்ளோம். அவர்களில் 125 பேர் சுகாதாரப் பணியாளர்கள். மேலும், 54 பேர் அதிக ஆபத்துள்ளவர்கள் பட்டியலில் இருப்பவர்கள். அதிக ஆபத்துள்ள பட்டியலில் உள்ளவர்களில் 30 பேர் சுகாதாரப் பணியாளர்கள் ஆவர். அதில் 38 பேர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வௌவால்கள்
சிறுவனின் தாய்க்கு இருந்த காய்ச்சல் சற்று குறைந்துள்ளது. கால்நடை வளர்ப்பு துறை அச்சிறுவனின் வீடு மற்றும் வளாகத்தை ஆய்வு செய்தது. அங்குள்ள ஏரியின் குறுக்கே வௌவால்களின் வாழ்விடத்தையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் மூலம் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். அச்சிறுவன் வீட்டில் இரண்டு ஆடுகளும் இருந்தன. அங்கிருந்தும் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

தேசிய நோய் கட்டுப்பாட்டுக் குழு
தேசிய நோய் கட்டுப்பாட்டுக் குழு புதன்கிழமை மாதிரிகளைச் சேகரிக்க இங்கு வரவுள்ளனர். நோயாளியின் தொடர்புகளைத் தவிர வேறு யாராவது நிபா அறிகுறிகள் உள்ளதா என்பதைக் கேரள சுகாதாரத் துறை நாளை முதல் வீடு வீடாகச் சோதனை செய்யத் தொடங்கும். நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம்.

அரசு வழிகாட்டுதல்கள்
மேலும், அனைத்து மாவட்ட அதிகாரிகளும் எச்சரிக்கையுடன் இருக்கவும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிபா வைரசைக் கட்டுப்படுத்துவதில் கண்காணிப்பு, சோதனை மற்றும் சிகிச்சை முக்கியமானவை. இது குறித்து கேரள அரசு தேவையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதைப் பொதுமக்கள் அனைவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications