அக்கவுண்டில் தப்பா விழுந்த ரூ.2.44 கோடி! லோன் கட்டி, ஐ போன் வாங்கிய கேரள இளைஞர்.. பிறகுதான் ட்விஸ்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் தனது வங்கி கணக்குக்கு தவறுதலாக வந்த ரூ.2.44 கோடி தொகையை திருப்பி கொடுக்காமல் அதைக்கொண்டு வீட்டு லோனை அடைத்து, ஐ போன் வாங்கி, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு, பங்குச் சந்தையில் முதலீடு செய்த இளைஞர் பிறகு, வசமாக சிக்கிக்கொண்ட பரபரப்பு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
திருச்சூர் அருகே உள்ளன அரிம்பூரைச் சேர்ந்தவர் நிதின். இவர் ஒரு செல்போன் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவருடைய நண்பன் மனு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் தனித்தனியே வங்கியில் கடன் பெற்று வீடு கட்டியுள்ளனர். லட்சக்கணக்கில் வாங்கப்பட்ட கடனுக்கு தற்போது வட்டி கட்டி வருகின்றனர்.
வாழ்க்கையில் பெரும் பணக்காரர்களாக மாற என்று இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இவ்வாறு பேசும்போதெல்லாம் மனு தனது நண்பன் நிதினுக்கு அட்வைஸ் கொடுத்து வந்திருக்கிறார். அதாவது கொஞ்சம் காசு சேர்த்தால் போதும் ஆன்லைன் டிரேடிங் செய்யலாம் என்றும் அதேபோல பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பண மழை
இப்படியே வாழ்க்கை போய்க்கொண்டிருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் தீடிரென நிதின் வங்கி கணக்குக்கு ரூ.2.44 கோடி டெபாசிட் ஆகியுள்ளது. முதலில் இதை போலி மெசேஜ் என்று புறந்தள்ளியுள்ளார். ஆனால் வங்கி கணக்கை பரிசோதித்தபோது இது உண்மை என்று அவருக்கு தெரிந்துள்ளது. இதனை பார்த்த அவருக்கு தலைக்கால் புரியவில்லை. அன்று பணியிலிருந்து சீக்கிரமே வீடு திரும்பியுள்ளார். மீண்டும் மீண்டும் தன்னுடைய வங்கிக் கணக்கை பரிசோதித்து பார்த்துள்ளார். ரூ.2.44 கோடி டெபாசிட் ஆகியிருப்பது உறுதிதான் என்பதை தெரிந்துகொண்ட அவர் வங்கியின் பண பரிவர்த்தனையை செக் செய்துள்ளார். ஆனால் இவருக்கு யார் பணத்தை அனுப்பியது என்பது தெரியவில்லை
திட்டம்
எனவே இவருக்கு தலைக்கால் புரியவில்லை. இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து மீண்டும் மீண்டும் தேடி பார்த்துள்ளார். ஆனால் எப்படி வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து தனது நண்பனான மனுவை அழைத்து இது குறித்து கூறியுள்ளார். இதனை முதலில் நம்ப மருத்து மனு, பின்னர் நிதினின் பேங்க் பேலன்ஸை செக் செய்து நம்பியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து பெரிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அதன்படி இருவரின் வீட்டு கடனை முதலில் அடைப்பது என்று தீர்மானித்துள்ளனர். கடனை அடைத்த பின்னர் மீண்டும் இருவரும் அமர்ந்து பேசி திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தின்படி ஐபோனை வாங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பங்கு சந்தை
எனவே ஆளுக்கு இரண்டு என லேட்டஸ்டு மாடல் ஐ போன்களை வாங்கியுள்ளனர். அப்படி வாங்கியும் இந்த பணம் மீதம் இருந்துள்ளது. எனவே மீண்டும் மூன்றாவது ரவுண்டு உட்கார்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். மனுவுக்கு ஆன்லைன் டிரேடிங் குறித்து ஓரளவு தெரியும் என்பதால் அதில் பணத்தை முதலீடு செய்வதென்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படியே ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் நடந்து முடிந்த பின்னரும் பணம் மீதம் இருந்துள்ளது. எனவே கடைசியாக இதனை அவர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளனர். ஆக ஒரு பைசா மீதம் இருக்காமல் மொத்த பணமும் காலியாகியுள்ளது.
கைது
இவையெல்லாம் நடந்து முடிந்த பின்னர் தீடிரென ஒருநாள் திருச்சூர் காவல்துறை நிதினின் வீடு தேடி வந்து விசாரித்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை கைது செய்துள்ளது. அவர் கொடுத்த தகவலின் பேரில் மனுவும் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர்தான் இவர்களுக்கு விஷயம் தெரிய வந்துள்ளது. அதாவது தனியார் வங்கி ஒன்று பண பரிவர்த்தனை செய்யும் போது செய்த தவறால்தான் நிதினின் கணக்குக்கு இந்த ரூ.2.44 கோடி டெபாசிட் ஆகியிருக்கிறது என்று. பொதுவாக இவ்வாறு பணம் வந்தால் பணத்தை பெற்றவர்கள் காவல் நிலையத்தில் சென்று நடந்த சம்பவத்தை கூறி பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் இவர்கள் முழு பணத்தையும் செலவு செய்துள்ளார்கள். எனவே வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.