'சாவி' கூர்க்காகிட்ட கூடத்தான் இருக்கு.. ‘வெள்ளை அடிச்சு தரட்டும்’- ஈபிஎஸ் பற்றி ஓபிஎஸ் டீம் சுளீர்!
திருச்சி : கூர்க்காவிடம் சாவி இருக்கிறது என்பதற்காக அந்த இடமே அவருக்குச் சொந்தம் என்றாகிவிடாது. சாவி இருக்கிறது என்பதால் அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமாகி விடுமா என அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி நடந்த மோதலைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் அங்கு செல்லத் திட்டமிட்டு வருகிறார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இந்நிலையில், திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அதிமுகவை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர் என்று தான் தற்போது வரை தேர்தல் ஆணையத்தில் உள்ளது. பொதுச் செயலாளர் தேர்தலுக்கான களப்பணிகளில் நாங்கள் தற்போது ஈடுபட்டு வருகிறோம். மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவுரை கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தான் அர்த்தம் என்றனர்.

சாவி - கூர்க்காவிடம்
அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இருக்கிறதே, உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்துவிட்டதே என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஜெயில் சாவி கூர்க்காவிடம் இருக்கிறது என்பதற்காக ஜெயிலே அவருக்கு சொந்தமாகி விடுமா? சாவி மட்டும் தான் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது. அதிமுக அலுவலகம் அனைவருக்கும் சொந்தம் எனத் தெரிவித்தார்.

வெள்ளை அடிச்சு தருவாங்க
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் ஈபிஎஸ் தரப்பினரால் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு வீட்டை வெள்ளை அடித்து தான் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பார்கள். அந்தப் பணிகளை தான் தற்போது அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் எங்கள் அலுவலகம் எங்கள் கைக்கு வந்து விடும் அதன் பிறகு அனைத்தும் சரி செய்யப்படும் என்றார்.

இடைக்காலமே கிடையாது
மேலும் பேசிய அவர், பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். தொண்டர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். அதிமுக சட்ட விதிப்படி இடைக்காலம் என்பதே கிடையாது. ஆகையால் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதும் செல்லாது. அப்படி ஒன்று கிடையவே கிடையாது. அப்படி ஒன்று இருந்தால் சசிகலா இப்போது இடைக்காலப் பொதுசெயலாளர் தானே. எதிர்காலத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அந்த பதவியோடு நடத்துவோம்.

தேர்தல் நடத்தப்படும்
அதிமுகவை எப்படி நடத்த வேண்டும் என்று எம்ஜிஆர் சட்ட விதிகளை உருவாக்கி வழங்கி உள்ளார். அதன்படியே நாங்கள் பயணிப்போம். எம்ஜிஆரையோ ஜெயலலிதாவையோ எதிர்த்து நிற்க யாரும் அப்போது இல்லை. அதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், அப்படிப்பட்ட வல்லமை படைத்த தலைவர்கள் இப்போது யாரும் இல்லை. ஆகையால் தேர்தல் மூலமாக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரால் மட்டுமே அதிமுகவை வழிநடத்த முடியும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications