அடுத்த 3 மணி நேரம்.. 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று வெயில் சுட்டெரித்தது. தலைநகர் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. கோவை, நீலகிரி, தஞ்சை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. ஆனால் இதை தவிர மற்ற இடங்களில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. இந்த நிலையில் தான் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும், தென்காசி, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
பலத்த தரைக்காற்று வீசும்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
11 ஆம் தேதி வரை
நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 07-07-2025 முதல் 11-07-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு சான்ஸ்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (05-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை சென்னையில் (06-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி உயரக்கூடும். இவ்வாறு அதில் கூறபப்ட்டுள்ளது.












Click it and Unblock the Notifications