விவசாயத்தை காத்திடு.. விவசாயியை வாழவிடு.. மக்கள் அதிகாரம் அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரம்
விவசாயிகளை வாழவிடு. விவசாயியின் அழிவு சமூகத்தின் பேரழிவு என்ற முழக்கத்தோடு மக்கள் அதிகாரம் அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சேத்தியாத்தோப்பு பகுதியில் மேற்கொண்டனர்.
கடலூர்: விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
விவசாயிகள் வாழ்வதா, சாவதா என்று அன்றாடம் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு சற்றும் கவலைப்படுவதில்லை. 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடி வரும் நிலையில் விவசாயம் குறித்து தமிழக அரசுக்கு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
மேலும், காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை தமிழக அரசு விட்டுக் கொடுக்கிறது. முல்லைப் பெரியாறில் நமக்குள்ள உரிமை மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆறுகளின் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிக்கப்படுகின்றன. காடுகளை அழித்து இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.
இது போன்ற விவசாயத்தை சார்ந்த எண்ணற்ற பிரச்சனைகள் தமிழ் நாட்டில் அதிக அளவில் எழுந்துள்ளன. ஆனால் இது பற்றி தமிழக அரசு வாயே திறப்பதில்லை. இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது விவசாயமும் விவசாயிகளும்தான்.
இந்நிலையில், விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விவசாயத்தை காக்க வேண்டும் என்று அதிகாரம் அமைப்பு சார்பில் சேத்தியாத்தோப்பு பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.