நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளிலும் ஒரு ரவுண்டு வந்து சகலவிதமான பதவிகளையும் அலங்கரித்த கே.கே.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 77.
நாமக்கல் மாவட்ட திமுகவில் ஒரு காலத்தில் ஓஹோவென இருந்தவர் கே.கே.வீரப்பன். திமுகவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர் என பல பதவிகளில் இருந்தவர் கே.கே.வீரப்பன். முன்னாள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திச்செல்வனின் அரசியல் ஆசானாகவும் திகழ்ந்தவர் கே.கே.வீரப்பன்.
ஒரு கட்டத்தில் கட்சி தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கும் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஒரு ரவுண்டு வந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஒய்வெடுத்த வந்த கே.கே.வீரப்பன், கடந்த சில மாதங்களாகவே மருத்துவச் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதனிடையே நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கே.கே.வீரப்பன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக, காங்கிரஸ், அதிமுக என அனைத்துக் கட்சிகளை சேர்ந்த நாமக்கல் மாவட்ட பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்திருப்பதோடு அஞ்சலியும் செலுத்தினர். மறைந்த கே.கே.வீரப்பனுக்கு சிவகாமி என்ற மனைவியும், சந்திரசேகர், ராஜேந்திரகுமார் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். Namakkal KK Veerappan passed away: நாமக்கல் மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளிலும் ஒரு ரவுண்டு வந்து சகலவிதமான பதவிகளையும் அலங்கரித்த கே.கே.வீரப்பன் காலமானார்.