பாரதி பக்கம்
11. பரசிவ வெள்ளம்
- உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே (1)
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே. (2)
எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவாய் (3)
வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.(4)
தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி, (5)
தன்னையொன் றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான் பலவாய் நிற்பதுவே. (6)
எங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே. (7)
வேண்டுவோர் - வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமதே. (8)
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்த் திருக்கும், வகுத்துரைக்க வொண்ணாதே.(9)
எல்லாந் தானாகி யிருந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பார் வாய்மையெல்லாங் கண்டவரே. (10)
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனைந்துங் கண்டவரே. (11)
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார் ;
எப்பொருளைத் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே .(12)












Click it and Unblock the Notifications