பாரதி பக்கம்
(தொடர்ச்சி)சொல்லிதனைக் கேட்டுத் துரியோ தனமுடன்,
வல்லிடிபோல் சீச்சீ! மடையா, கெடுக நீ
எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்புனக்கே
இப்போதுன் சொல்லை எவருஞ் செவிக்கொளார்
யாரடா, தேர்ப்பாகன்! நீபோய்க் கணமிரண்டில்
பாரதர்க்கு வேந்தன் பணிந்தான்எனக் கூறிப்
பாண்டவர்தந் தேவிதனைப் பார்வேந்தர் மன்றினிலே
ஈண்டழைத்து வா என் றியம்பினான். ஆங்கே தேர்ப்
பாகன் விரைந்து போய்ப் பாஞ்சாலி வாழ்மனையில்
சோகம் ததும்பித் துடித்த குரலுடனே,
அம்மனே போற்றி! அறங்காப்பாய், தாள் போற்றி!
வெம்மை யுடைய விதியால் யுதிட்டிரனார்
மாமன் சகுனியொடு மாயச்சூ தாடியதில்,
பூமி யிழந்து பொருளிழந்து தம்பியரைத்
தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்திழந்தார் .
சாற்றிப் பணயமெனத் தாயேஉனை வைத்தார்.
சொல்லவுமே நாவு துணியவில்லை ; தோற்றிட்டார்.
எல்லாருங் கூடியிருக்கும் சபைதனிலே,
நின்னை அழைத்துவர நேமித்தான் எம்மரசன்
என்ன உரைத்திடலும்,யார் சொன்ன வார்த்தையடா!
(தொடரும்)