முக்கூட்டு உருவாக வேண்டும்!
அண்மையில் சீனப்பிரதமர் வென் ஜியா பாவ் இந்தியா வருகைதந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுடன் நடத்திய பேச்சு பயனுள்ளதாக அமைந்திருப்பது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.
""ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆகவேண்டும் என்ற கோரிக்கைக்கு சீனப்பிரதமர் ஆதரவு தெரிவித்திருப்பது மிக முக்கியமானதாகும்.
1949ஆம் ஆண்டில் செஞ்சீனம் உருவானபோது அதற்கு முதல் அங்கீகாரம் தந்த கம்யூனிஸ்டு அல்லாத நாடு இந்தியா என்பதையும், ஐ.நா. பேரவையில் உறுப்பினராகச் செஞ்சீனம் சேர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்காக இடைவிடாது போராடியதும் இந்தியாவே என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது சீனாவின் மேற்கண்ட செயல் நன்றி பாராட்டும் செயலாக அமைந்துள்ளது.
""இந்தியா # சீனா # ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து செயல்படவேண்டும் என்ற கருத்தினையும் சீனப்பிரதமர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதனை உலகெங்கும் உள்ள அமைதி விரும்பிகள் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.
உலகப் பெரும் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கிய சோவியத் ஒன்றியத்தின் மறைவின் விளைவாக உலக நாட்டாண்மைக்காரனாகத் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டுள்ளது அமெரிக்கா.
ஐ.நா. பேரவை என ஒரு அமைப்பு இருப்பதையே கொஞ்சம் மதிக்காமல், ஈராக் மீது பொய்யான குற்றம்சாட்டி அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அமெரிக்கா நடத்திய அட்டூழியங்களைத் தடுக்க வழிதெரியாமல் உலகம் திகைத்தது.
நாளுக்கு நாள் அமெரிக்காவின் அடாவடித்தனம் அதிகரித்துக்கொண்டு போகிறதே தவிர கொஞ்சமும் குறைந்தபாடில்லை.
ஆசிய#ஆப்பிரிக்கா#தென் அமெரிக்க நாடுகள் இதனால் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. அமெரிக்காவின் நாட்டாண்மைப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா # சீனா # ரஷ்யா ஆகிய முக்கூட்டு உருவாக வேண்டும்.
உலகில் மக்கள்தொகையிலும், நிலப்பரப்பிலும் மிகப்பெரிய நாடுகளான இந்த மூன்று நாடுகளும் தோளோடு தோள் இணைந்து நிற்பதன் மூலமே அமெரிக்க ஏகாதிபத்திய போக்குக்குச் சரியான மாற்று சக்தியாக விளங்கமுடியும்.
உலகில் நிரந்தரமான அமைதி நிலவவும், ஐ.நா. பேரவை வலுப்படவும், எளிய நாடுகளின் இறையாண்மையும், சுதந்திரம் பாதுகாக்கப்படவும் இந்த மூக்கூட்டு அச்சு உதவும்.
சீனப்பிரதமர் யோசனைக்கு இந்திய அரசு ழுமையாக ஆதரவு தரவேண்டும். ரஷ்யாவுடனும் பேசி மூக்கூட்டு யோசனைக்குச் செயல்வடிவம் கொடுக்க ஆவன செய்ய வேண்டும்.
- தென் செய்தி கட்டுரை
நன்றி- தென்செய்தி([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.