விபத்தில்லா தீபாவளி கொண்டாட!
வேரென்ன... பட்டாசு வெடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். ஆனால் இப்படி ஒற்றை வரியில் சொன்னால் நம்ம 'எடிட்டர்' விடமாட்டாரோ... அதனால் கொஞ்சம் விவரமா பார்ப்போம்!
உங்களுக்காக பிரபல தீக்காய ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் குமரவேல் (அரசு பொது மருத்துவமனை, சென்னை) கூறும் குறிப்புகள்:
அடுத்தவர்களுடன் போட்டி போட்டு பட்டாசு வெடிக்காதீர்கள். அதில்தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கவே கூடாது. பெரியவர்கள் உடன் இருப்பது பாதுகாப்பானது. எப்போதும் திறந்த வெளியில் பட்டாசு கொளுத்துவதே பாதுகாப்பானது.
குழந்தைகள் பட்டாசுகளை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள்.
குறுகலான சந்துகளிலும், அடுக்கு மாடி குடியிருப்புகள் மத்தியிலும் சர வெடிகளை வெடிக்க யாரும் அனுமதிக்காதீர்கள். நம்ம ஊர் கட்டடங்கள் இருக்கும் லட்சணத்தைப் பார்த்தால் 'ரமணா கதை' நிஜத்தில நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பாட்டாசுகளை வீட்டில் ஒரே இடத்தில் கட்டி வைத்து வெடிக்காதீர்கள். பட்டாசு வெடிக்கும் போது தளர்ந்த ஆடைகள், நைலான், சில்க் துணிகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. இறுக்கமான ஆடைகள், பருத்தி ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு தீபாவளிக்கும் என்னிடம் தீக்காயங்களுடன் தவறாமல் மக்கள் ஆஜராகிவிடுவார்கள். எப்படி ஆச்சுன்னு கேட்டா, பக்கத்து வீட்டுப் பையன் விட்ட ராக்கெட் என் தலைல இறங்கிடுச்சுன்னு பரிதாபமா சொல்வாங்க.
இந்த மாதிரி திருவிழாக்களில் ராக்கெட் வெடிகளை மைதானங்களில் வைத்து வெடிக்கவும். அதற்கு வழியில்லாவிட்டால் தவிர்த்துவிடவும். உங்கள் கண நேர சந்தோஷம், அடுத்தவருக்கு ஊயுளஅகால துண்பமாகவும் முடியலாம் அல்லவா!
எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி, மத்தாப்பு, இராக்கெட், ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளியில் அல்லது உலர்ந்த மண்ணில் போட்டு மூடி வையுங்கள். பட்டாசு கொளுத்துவதற்கு முன்பு அருகில் போதுமான அளவு தண்ணீரை வாளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பட்டாசுகளை கொளுத்துவதற்கு தீப்பெட்டியை பயன்படுத்த கூடாது. மாறாக, நீளமான ஊதுவத்திகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ராக்கெட், வெங்காய வெடி போன்றவைகள் அதிக தீ விபத்துக்களை ஏற்படுத்துவைகள். அதனால் அந்த ரக வெடி வகைகளை தவிர்த்தால் தீ விபத்தில் இருந்து தப்பிக்கலாம்.
போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள், நெரிசல் மிகுந்த இடங்களில் பட்டாசு கொளுத்துதல் கூடவே கூடாது. பல முறை தீபாவளி பட்டாசு வெடித்து நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டிருக்கிறது.
பட்டாசு வெடிக்கும் போது அதை விளையாட்டாக அடுத்தவர் மீது தூக்கி எறிதல் கூடாது. கண்டிப்பாக காலனிகளை அணிந்து கொண்டு வெடிக்கவும்.
பாட்டில்களில் வைத்து பட்டாசு வெடித்தால் பாட்டில் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. அதனால், அந்த கண்ணாடி சில்கள் உடலின் பல பகுதிகளில் உள்ளே சென்று தாக்கும்.
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை மாசினால் நுறையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி, போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கண்ணில் தீப் பொறி பட்டால்...
கண்ணில் தீ காயம் ஏற்பட்டால் நிறைய தண்ணீரை விட்டு 10 நிமிடங்களுக்கு குறையாமல் கழுவ வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது உடலில் தீ விபத்து ஏற்பட்டால், உடனே ஒடுதல் கூடாது. மாறாக தரையில் உருண்டு புரள வேண்டும். அப்போது தான் தீ கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீர் ஊற்றி மெல்லிய துணியால் மூடி மருத்துவ மனைக்கு உடனே அழைத்துச் செல்ல வேண்டும்.
மாறாக தீக்காயம் உள்ள இடத்தில் துணியால் அழுத்தி துடைக்க கூடாது. மேலும் இங்க், ஆயில் போன்ற பொருட்களை காயம் பட்ட இடத்தில் உபயோகிக்க கூடாது.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அருகில் உள்ள தீயணைப்புத் துறை நிலையங்கள் மற்றும் டாக்டர்கள் போன், செல்போன் எண்கள், நமக்கு ஆபத்திற்கு உதவ கூடிய நண்பர்கள் முகவரி, செல் எண்களை வீட்டில் நமது பார்வை அடிக்கடி படும் இடத்தில் எழுதி ஒட்டி வைப்பது நல்லது!