தேவை கூட்டணி தாவல் தடை சட்டம்!
-அதிரை முஜீப் (துபாய்)
நாடாளுமன்றத் தேர்தல் ஒருவழியாக நடந்தேறியுள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் ஒட்டு பதிவு நடந்து முடிந்தவரை அல்லது நடந்து கொண்டிருக்கும் வரை நடந்தேறிய காட்சிகள். ஆகா.. மிக அற்புதம்.
சில பேருக்கு நல்ல ஒரு காமெடி படம் இலவசமாகவே பார்த்த ஒரு சந்தோஷம். ஒரு சிலருக்கு வெள்ளையனிடம் இருந்து வாங்கப்பட்ட சுதந்திரம் இந்த அரசியல்வாதிகளிடம் சிக்கி படும்பாடு கண்டு ஓட்டு போடவே மனம் இல்லாத நிலை.
உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் நம் தேர்தல் கமிஷனுக்கோ மத்தளம் போல் இரண்டு பக்கமும் இடி.
முன்பெல்லாம் ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர் தனக்கு சாதகமாக உள்ள கட்சிக்கு மாறி ஆட்சியை கவிழ்ப்பதும், அதைப் பயன்படுத்தி அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை அடைவதும் மிக சர்வ சாதரணமாக நடக்கும் கூத்தாக இருந்தது.
பின்னர் ஒரு சில நல்லவர்களின் (?) முயற்சியால் கட்சித் தாவல் தடை சட்டம் என்ற ஒரு கடிவாளத்தை போட்டபின் இந்த அரசியல் குதிரைகள் சற்று அடங்க ஆரம்பித்தன.
பின் குதிரை பேரங்கள், நாடாளுமன்றத்திலே கட்டு கட்டாக பணத்தை கொட்டியதை எல்லாம் இந்த ஜனநாயகம் கண்ட பணநாயகம். இப்போது இது பரிணாம வளர்ச்சி கண்டு கூட்டணி தாவலாக உருமாறி இருக்கிறது.
தேர்தலுக்கு முன்பு வரை ஒவ்வொரு கட்சியும் தனியாகவும் அல்லது கூட்டணியாகவும் இருப்பது. பின்னர் கூட்டணியில் இருந்து கொண்டே எதிரணிக்கு தூது விடுவது, ஆழம் பார்ப்பது.
பிரச்சாரத்தில் எதிரணிகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியவர்கள் தேர்தல் நடந்து கொண்டு இருக்கும் போதே அதே தண்டவாளத்தில் இவர்களும் பயணித்து கூட்டணி மாறத் தொடங்கிவிட்ட காட்சியை என்னவென்று சொல்வது.
ஒரு அணியுடன் கூட்டணி வைத்து வென்றபின் அதே அணியுடன் தொடராமல் வேறு அணிக்கு மாறி ஆதரவு அளித்தால் அதுவும் கட்சி தாவலைப் போலவே கருதி இவர்களை தகுதி இழக்க வைக்க வேண்டும்.
எனவே கட்சி தாவல் தடை சட்டம் போல் இப்போது கூட்டணி தடை தாவல் சட்டமும் நமக்கு அவசியமாகிறது.