திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்
திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதை தரிசித்தனர்.அசுரன் சூரபத்மனை வதம் செய்த திருத்தலம் திருச்செந்தூர். பின்னர் திருச்செந்தூரில் 5 சிவலிங்கங்களை வைத்து வழிபட்டார் முருகப் பெருமான்.
இத்தயைக புகழ்மிக்க திருத்தலமான திருச்செந்தூர் முருகப் பெருமானின் 2வது படை வீடாகவும் சிறப்புற திகழ்கிறது.
மற்ற படை வீடுகள் எல்லாம் குன்றில் அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடலோரம் அமைந்துள்ளது இன்னொரு தனிச் சிறப்பாகும்.
கடந்த 1995ம் ஆண்டு இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையி்ல 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஜூன் 26-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. இன்று காலை 10.30 மணிக்கு மேல் காலை 11.15 மணிக்குள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி அதிகாலை 5.45 மணிக்கு தொடக்க பூஜைகளுடன் விழா தொடங்கியது.
இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி-தெய்வானை அம்பாள் சன்னதியில் விழா தொடக்க பூஜைகள், மரபாணி, வாசனை தான்ய திருக்குட நீராட்டு, புனிதநீர், விமான அபிஷேகம், எண்வகை மருந்து சாத்துதல், எழுந்திருப்பு, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல் ஆகிய நிகழ்ச்சிகளும், சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி, திருக்காப்பிடுதல், 12-வது கால யாகசாலை பூஜைகள், வேள்வி பூஜை, திருக்குடத்தில் இருந்து திருமேனிக்கு உரு ஏற்றல், மகா நிறை அவி அளித்தல், ஆலயப்பயன் புகுமுகம், கடம் மூலாலய பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகள் தொடங்கின.
பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கும்பங்கள் கிரி பிரகாரம் சுற்றி கோவில் ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் சன்னதிகளுக்கும் மேள வாத்தியம் முழங்க எடுத்து செல்லப்பட்டன.
காலை 10-30 மணியளவில் ராஜகோபுரம் உள்பட அனைத்து விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கப் பெருமான் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், தமிழக அரசின் தலைமை செயலாளர் ஸ்ரீபதி, மதுரை ஆதீனம் அருணகிரி, திருபனந்தாள் காசிவாசி முத்து குமார தம்பிரான் சுவாமிகள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிரகாஷ், ஜெயதுரை எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அபிஷேகத்துடன் தங்க ஆபரணம் அணிவித்து தீபவழிபாடு உள்பட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு சண்முகர் தீப வழிபாடு மற்றும் பரிவார மூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கும்பாபிஷேகத்தைக் காண பல்வேறு பகுதிகளிலிரு்நதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். இதனால் வங்கக் கடலோரம், மக்கள் கடலாக மாறியுள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்புப் பேருந்துகள், ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் கும்பாபிஷேகத்தை www.tiruchendurmurugantemple.com என்ற தனது இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.