கராத்தே போட்டி - பணமில்லாததால் போக முடியாமல் தவிக்கும் சிறுவன்
மதுரை: கராத்தே போட்டியில் திறமை படைத்த மதுரையைச் சேர்ந்த 11 வயது சிறுவன், மும்பையில் நடக்கும் தேசியப் போட்டியில் பங்கேற்கச் செல்ல போதிய பண வசதி இல்லாததால், பங்கேற்க முடியாதா என்ற கவலையில் இருக்கிறான்.
மதுரை மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் நரேஷ். ஆறாவது படித்து வருகிறான். கராத்தே, யோகாவில் ஆர்வமுள்ளவன். பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள், சான்றிதழ்களைக் குவித்து வைத்துள்ளான்.
கராத்தே போட்டியில் "கிரீன் பெல்ட்' பெற்றுள்ளான். 11 வயதுக்குட்பட்டோர் போட்டியில் பங்கேற்று இருமுறை மாவட்ட விருதும், மூன்று முறை மாநில அளவிலும், இருமுறை தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
அடுத்து மும்பையில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளான். இதற்காக கடந்த ஜூலை மாதம் தூய பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் பங்கேற்று தேர்வு பெற்றுள்ளான்.
மும்பையில் "இஷிகாவா கப்' என்ற இப்போட்டி அக். 30 முதல் நவ. 2 வரை நடக்க உள்ளது. ஆனால் நரேஷ் மும்பை செல்ல தேவையான பணமில்லாததால் வேதனையில் தவிக்கிறான். அவனது தந்தை ஜெராக்ஸ் பிரதிகள் எடுக்கும் பணி செய்து வருகிறார்.
தேசிய விருதுகளை பெற்றும் மேலும் தேசிய போட்டியில் பங்கேற்க இயலாமல் போய்விடுமோ என வருத்தமாக உள்ளது என்கிறான் இந்த திறமைச் சிறுவன்.
இச்சிறுவனுக்கு உதவ நினைப்போர் 98420 58467 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.












Click it and Unblock the Notifications