பவள விழா காணும் மேட்டூர் அணை!
ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்தியாவின் பழமையான அணைகளில் ஒன்று மேட்டூர் அணை. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து 100 சதுர கி.மீ. விவசாய நிலங்களின் நீர் ஆதாரமாக திகழ்கிறது மேட்டூர் அணை.
இந்த அணை கட்டப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி அணைக்கு பவள விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அணையின் நீர் நிலவரம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 8.57 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தாமதமானதால், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
திருச்சி மண்டலத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 2,241 ஏரிகளில், பருவ மழையால் 418 ஏரிகள் நிரம்பியுள்ளன.
சுற்றுப்பகுதியில் பலத்த மழை பெய்வதால், கல்லணைக்கு மட்டும் 30 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. அந்த நீரை திறந்து ஏரிகள் முழுமையாக நிரப்பப்படும் என்றார்.