ஜெட்டாவில் நடந்த இந்திய உணவு விழா
ஜெட்டா: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தமிழ்ப் பெண்கள் கலந்து கொண்ட இந்திய உணவுத் திருவிழா நடந்தத.இந்த விழாவை தமிழ்நாடு முஸ்லிம் லீக் மகளிர் அணித் தலைவி ஃபாத்திமா முஜாஃபர் தலைமைத் தாங்கி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
ஃபஹீமா அக்பர், கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, ஃபாத்திமா சீனி அலி வரவேற்புரை வழங்கினார். தலைமை விருந்தினர் பாத்திமா முஜாஃபர், சிறப்பு விருந்தினர் அமீரா ஷபிபீ இருவரும் சிறப்புரை வழங்கினார்கள்.
ஃபரீதா கரீமுதீன், இந்திய பண்ணாட்டு பள்ளியின் துணை முதல்வர் ஃபர்ஹத்துன்னிசா, சிறப்பு விருந்தினர் (சவுதி பெண்மணி) அமீரா ஷபிபீ, மகளிர் உலகத்தின் நிறுவனத் தலைவர் தில்ஷாத் அக்பர் பாட்சா, நிறுவனச் செயலாளர் மும்தாஜ் சீனி அலி, நிறுவனப் பொருளாளர் நஜ்மா ஜின்னா ஆகியோரின் முன்னிலையில் விழா நடந்தது.
விழா மற்றும் போட்டிகளை ஹசீனா சுஃபியான், சஃபீனா சுலைமான், ராபியா மொய்தீன் மற்றும் அஜீதா சலீம் ஆகியோர் ஒருங்கினைப்பாளர்களாக இருந்து நடத்தி வைத்தனர்.
இந்திய உணவுத் திருவிழாப் போட்டி எதிர்பார்த்ததைவிட அதி விமர்சையாக நடந்தேறியது. சைவம், அசைவம், காரம் மற்றும் இனிப்பு வகைகள் என்று முப்பதிற்கும் மேற்பட்ட உணவுப் படைப்புகள் கண்ணை கவரும் விதவிதமான வண்ணங்களில் அரங்கேறியது.
ஃபரிதா கரீமுதின் மற்றும் ஃபாத்திமா முஜாஃபர் இருவரும் நடுவராக இருந்து உணவு வகைகளின் சுவை, அலங்காரம், தயாரிப்பு முறை மற்றும் படைப்பின் விதங்களை கவனத்தில் கொண்டு உணவு வகைகளில் மூவரையும், இனிப்பு பிரிவில் இருவரையும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுத்தனர்.
உணவுப் பிரிவில் முதல் பரிசை முபீனா நிசார், இரண்டாவது பரிசை ரஹ்மத் ஜமீல் மற்றும் மூன்றாவது பரிசை சத்யா சுப்ரமணியமும் வென்றனர்.
இனிப்பு பிரிவில் சுமையா முதல் பரிசையும், அமீன் அன்சாரி இரண்டாவது பரிசையும் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை விருந்தினர் பாத்திமா முஜாஃபர் மற்றும் ஃபரீதா கரீமுதீன் ஆகியோர் பரிசுகளையும் சான்றிதழ்களும் அளித்தனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இறுதியில் ஷிஃபான சுலைமான் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவேறியது.
சமூக மற்றும் கல்வி மேம்பாடுகளில் தமிழ்ப் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தொடங்கப்பட்ட இந்த மகளிர் உலகம் மிகக் குறுகிய காலத்தில் நடத்திய இந்த நிகழ்ச்சி ஜெட்டா வாழ் தமிழர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது பாரட்டத்திற்குரியது என்று இத்தகவலை அனுப்பியுள்ள மு. இ. முஹம்மது இபுராஹீம் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.