களக்காடு் முண்டந்துறை புலிகள், காப்பகத்தில் 13 புலிகள்: தமிழகத்தில் மொத்தம் 67 முதல் 72 புலிகள்
நெல்லை: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 13 புலிகள் இருப்பதாக தலைமை வனப்பாதுகாவலர் மல்லேசப்பா தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழகத்தில் மிகச் சிறந்த காப்பகமாகும். 895 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த புலிகள் காப்பகத்தில் அரிய வகை தாவரங்கள், மூலிகைகள், அரிய வகை விலங்குகளான சிங்கவால் குரங்குகள், வரையாடுகள் உள்ளன.
தமிழகம் முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், யானைகள் கணக்கெடுப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகிறது. கடந்த 2006-ம் ஆண்டு விஞ்ஞான முறைப்படி புலிகளின் காலடித் தடம், எச்சம் ஆகியவற்றைக் கொண்டும், 24 மணி நேரமும் இயங்கும் கேமிராவைக் கொண்டும் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி முதுமலையில் 36 புலிகளும், ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை ஆகிய இடங்களில் தலா 6 முதல் 8 புலிகளும், பிற சரணாலயங்களையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 67 முதல் 72 புலிகள் இருப்பதாக இந்திய வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய புலிகள் கணக்கெடுப்பில் முண்டந்துறையில் 3 ஆண், 7 பெண், 3 இளம் புலிகளுமாக மொத்தம் 13 புலி்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தவிர 62 சிறுத்தைகள், 29 யானைகள், இடம் பெயர்ந்து வந்த 100 யானைகள், 182 சாம்பர் மான்கள், 45 வரையாடுகள், 17 சிங்கவால் குரங்குகள், 65 புள்ளிமான்கள் இருப்பதும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.