தமிழ் மொழி இனியது, ஆனால் கற்பதற்கு கடினமானது-ஷீலா தீட்சித்
டெல்லியில் தமிழ் 2010 என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. இதில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், கனடா லிண்ட்சர் பல்கலைக்கழக பேராசிரியர் சேரன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத் தலைவர் கி.நாச்சிமுத்து, டெல்லிப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஷீலா தீட்சித் பேசுகையில்,
நான் டெல்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வருவது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கிறேன். இதற்கு முன் நான் இங்கே திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்தபோது, தமிழக முதல்வர் கருணாநிதியும் வந்திருந்தார்.
எனக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. என் மருமகளே தமிழகத்தின் தலைநகர் சென்னையைச் சேர்ந்தவர்தான். எனக்கும் என் கணவருக்கும் தமிழ் நண்பர்கள் ஏராளம்.
தமிழகத்தில் எண்ணற்ற சீர்திருத்தவாதிகள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் பெரியார் எனப்படும் ஈ.வி.ராமசாமி. அவரது எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை நான் படித்து மிகவும் உத்வேகம் அடைந்திருக்கிறேன்.
மனிதகுல சமத்துவத்திற்காகவும், பெண்கள் விடுதலைக்காகவும் சாதி ஒழிப்புக்காகவும் அவர் ஏராளமான இயக்கங்களை நடத்தி இருக்கிறார். இந்தியாவிலேயே சமூகப் புரட்சியை ஆரம்பத்திலேயே கொண்டுவந்தவர் பெரியார் என்பதை நான் நன்கு அறிவேன். அத்தகைய சமூக சீர்த்திருத்தவாதிகளை எண்ணற்றோரைத் தந்தது தமிழகம்.
தமிழ் மொழி ஒரு இனிய மொழி. அதேசமயம், அதை கற்பதற்கு மிகவும் கடினமானதாகும். டெல்லி மாநகரத்தில் பல்வேறு மொழி பேசுவோர் வாழ்கிறோம். இதில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் குறிப்ட்ட பங்கு உண்டு. டெல்லித் தமிழ்ச்சங்கம் நடத்துகிற 2010 கருத்தரங்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.