திருச்செந்தூர் சஷ்டி விழா-125 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவுக்கு 125 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோவிலில் நவம்பர் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெற இருக்கிறது. மு்க்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 11ம் தேதி நடக்கிறது. இதில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களின் முன்னேற்பாடு சிறப்பு கூட்டம் திருச்செந்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.
கோட்டாட்சியர் பாக்கியம் தேவகிருபை, டிஎஸ்பி அப்பாசாமி, அறங்காவலர்கள் சந்திரசேகரன், தங்கத்துரை, யூனியன் சேர்மன் உமாதேவி சுந்தர் முன்னிலை வகித்தனர். கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் வரவேற்றார்.
பேரூராட்சி சார்பில் 12 இடங்களில் குடிநீர் பந்தல், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூடுதல் குடிநீர், பேரூராட்சி மூலம் 200 தற்காலிக கூடுதல் சுகாதார பணியாளர்கள், திருக்கோயி்ல் சார்பில் 300 துப்புரவு பணியாளர்களை நியமித்து துப்புரவு செய்வது, பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வரும் 260 அரசு பஸ்களுடன் 125 சிறப்பு பஸ்களை இயக்குவது, பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்களை ஈடுபடுத்துவது, தடையின்றி மின்சாரம் வழங்குவது, பஸ் நிலையம், கடற்கரை ஆகிய இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, 3 இடங்களில் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் கலெக்டக் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ 6ம் தேதியில் இருந்து நவ 11ம் தேதி வரை நடக்கிறது. இதில் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 மணி நேரமும் இயங்க கூடிய மருத்துவ வசதி செய்யப்படும். தனியார் மருத்துவமனைகள் கோயில் வளாகத்தில் சிறப்பு முகாம் நடத்த விரும்பினால் வேண்டிய வசதி செய்து கொடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications